ஜம்மு-காஷ்மீர் பேரவைத் தேர்தல் ஜனநாயகத்தின் வேர்களை மேலும் வலுப்படுத்தும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
ஜம்மு - காஷ்மீர் மற்றும் ஹரியாணா மாநிலங்களுக்கு பேரவைத் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. புது தில்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ் குமார்மற்றும் டாக்டர் சாந்து ஆகியோர் தேர்தல் தொடர்பான அறிவிப்பினை வெளியிட்டனர்.
அதன்படி ஜம்மு -காஷ்மீருக்கு செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1ஆம் தேதிகளில் மூன்று கட்டங்களாக பேரவைத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதைத்தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 4ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு, ஜம்மு-காஷ்மீர் பேரவைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஜம்மு-காஷ்மீருக்கு பேரவைத் தேர்தல் நடக்கவிருப்பதை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வரவேற்றுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், ஜம்மு காஷ்மீர் பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் ஆணையம் அறிவிப்பை வரவேற்கிறேன். கடந்த 10 ஆண்டுகளில், இடைவிடாத தொடர் முயற்சிகள் மூலம் மோடி அரசு, அமைதி, வளர்ச்சி மற்றும் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் புதிய சகாப்தத்தை ஜம்மு-காஷ்மீரில் உருவாக்கியுள்ளது.
பேரவைத் தேர்தல் ஜனநாயகத்தின் வேர்களை மேலும் வலுப்படுத்துவதோடு இப்பகுதியின் புதிய வளர்ச்சிக்கான கதவுகளைத் திறக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.