கொல்கத்தா மருத்துவர் பாலியல் கொலை வழக்கு: கோவாவில் மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்!
கொல்கத்தா மருத்துவர் பாலியல் கொலை வழக்கில், கோவா மருத்துவர்கள் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக தெரிவித்துள்ளனர்.
கொல்கத்தா மருத்துவர் பாலியல் கொலை வழக்குக்கு எதிராக கோவாவில் ஜூனியர், முதுநிலை பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், மாநில அரசின் உத்தரவைத் தொடர்ந்து 5 நாள்களாக நீடித்த போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளனர்.
தங்களுடைய கோரிக்கைகளை பரிசீலிப்பதாக கோவா மாநில சுகாதார அமைச்சர் விஸ்வஜித் ரானே உறுதியளித்ததையடுத்து, மருத்துவர்கள் சங்கம் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவின் ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆகஸ்ட் 9 அன்று பெண் முதுகலை பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமை முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால், கோவா அரசு நடத்தும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வழக்கமான மருத்துவச் சேவைகள் பாதிக்கப்பட்டன. ஆனால், அவசர மருத்துவச் சேவைகள் அனைத்தும் தடையின்றி நடந்தன.
கோவா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் அமைச்சர் ரானே மற்றும் டீன் டாக்டர் சிவானந்த் பாண்டேகர் முன்னிலையில் தங்கள் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர்.
இதுகுறித்து அமைச்சர் ரானே கூறுகையில், “தங்கள் கோரிக்கைகள் முதல்வரிடம் முன்வைக்கப்படும். அதன்பின்னர் அமைச்சரவையில் கோரிக்கைகள் முன்வைக்கப்படும் என்று நாங்கள் கோவா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு எழுத்துப்பூர்வமாக உறுதியளித்துள்ளோம்.
மருத்துவர்களின் பிரச்னைகளுக்கு தீர்வுகாண மருத்துவர்கள் தொடர்பு அதிகாரி நியமிக்கப்படுவார். கோவா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பாதுகாப்பு பலப்படுத்தப்படும்.
மருத்துவர்களின் கோரிக்கைகளை கோவா அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. மேற்குவங்கத்தில் ஒரு பெண் முதல்வராக இருந்தும், மேற்கு வங்க அரசு மருத்துவர்கள் மீது அக்கறை காட்டுவதில்லை. இது வருத்தமளிக்கிறது” என்றார்.