குறைந்தபட்ச ஆதரவு விலை: மோடி, ராகுலுக்கு விவசாயிகள் கடிதம்!
பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உத்தரவாதம் செய்யும் சட்டத்தை இயற்ற விவசாயிகள் வலியுறுத்தல்.
பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை (எம்எஸ்பி) உத்தரவாதம் செய்யும் சட்டத்தை இயற்ற வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்திக்கு விவசாய சங்கத்தினர் கடிதம் எழுதியுள்ளனர்.
26 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட கூட்டம் தில்லியில் இன்று (ஆக. 21) நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்குப் பிறகு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான உத்தரவாத சட்டத்தை இயற்றக்கோரி விவசாய அமைப்பினர் நரேந்திர மோடிக்கும், ராகுல் காந்திக்கும் கடிதம் எழுதினர்.
அக்கடிதத்தில், விவசாய சமூகத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் குறைந்தபட்ச ஆதரவு விலையைப் பெறுவதற்கு அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான மசோதாவை அறிமுகப்படுத்தி நிறைவேற்ற வேண்டும் எனக் கோரிக்கைவைக்கப்பட்டுள்ளது.
ஒருபுறம், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான உத்தரவாதம் அளிக்கும் சட்டத்தை எங்களுக்கு (விவசாயிகளுக்கு) நிராகரித்துவிட்டு, மறுபுறம் தொழிலதிபர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு அரசு உத்தரவாதம் அளித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சர்க்கரை ஆலை உரிமையாளர் மற்றும் அரசும் ஏற்று நடத்தும் பெட்ரோல் நிலையங்களுக்கு உத்தரவாதம் அளித்து அவர்களைக் காக்கும் அரசு, வாக்களித்த விவசாயிகளைக் காக்கும் வகையில் உத்திரவாதம் அளிக்க மறுப்பது ஏன்? எனக் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பேசிய கிஷான் மோர்ச்சா சங்கத் தலைவர் வி.எம். சிங், 2011ஆம் ஆண்டில் அப்போது குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி, நுகர்வோர் விவகாரங்கள் தொடர்பான அறிக்கையை தயாரித்த குழுவின் தலைவராக இருந்தார்.
அந்தக் குழு, குறைந்தபட்ச ஆதரவு விலையை அமல்படுத்த பரிந்துரை செய்திருந்தது. ஆனால் அரசு அதனை அமல்படுத்தவில்லை. இன்று மோடி பிரதமர் பொறுப்பில் உள்ளார். தற்போதும் அவர் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிப்பதில் உரிய நடவடிக்கை எடுக்காதது ஏன்? எனக் கேள்வி எழுப்பினார்.