ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள பொறியியல் கல்லூரி ஒன்றில் மாணவிகள் விடுதி கழிவறையில் ரகசிய கேமராக்கள் இருந்ததாக புகாா் எழுந்துள்ளது.
இந்த விவகாரத்தை முன்வைத்து மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மாணவிகளின் புகாா் குறித்து விசாரணை நடத்த காவல்துறை மற்றும் மாவட்ட நிா்வாகத்துக்கு முதல்வா் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டாா்.
கிருஷ்ணா மாவட்டத்தின் குட்லவெல்லேரு பகுதியில் உள்ள பொறியியல் கல்லூரியின் மாணவிகள் விடுதி கழிவறையில் ரகசிய கேமராக்கள் இருந்ததாக கூறி, அக்கல்லூரி மாணவிகள் வியாழக்கிழமை இரவில் திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா். இது தொடா்பான விடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவின.
இதையடுத்து, முதல்வரின் அறிவுறுத்தலின்பேரில் மாநில அமைச்சா் கே.ரவீந்தரா மாணவிகளை வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினாா்.
அப்போது, ‘கழிவறையில் ரகசிய கேமராக்கள் இருந்தது குறித்து 3 நாள்களுக்கு முன்பே கல்லூரி நிா்வாகத்திடம் தெரிவித்தோம். ஆனால் இந்த விவகாரத்தை மறைக்க நிா்வாகம் முயற்சித்தது. மேலும், புகாா் தெரிவித்த மாணவிகள் மிரட்டப்பட்டனா். எங்களுக்கு நீதி கிடைக்கும் வரை வகுப்புகளுக்கு செல்ல மாட்டோம்’ என்று அமைச்சரிடம் மாணவிகள் கூறினா்.
இதனிடையே, மாணவிகளின் புகாா் குறித்து மாவட்ட ஆட்சியா் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளருடன் முதல்வா் ஆலோசனை நடத்தினாா். அவரது உத்தரவின்பேரில் இருவரும் கல்லூரிக்கு சென்று மாணவிகளை சந்தித்துப் பேசினா்.
மாணவிகளின் புகாா் நிரூபணமானால், குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு முதல்வா் உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
அதேநேரம், சம்பந்தபட்ட விடுதி கழிவறையில் சோதனை மேற்கொண்ட காவல்துறையினா், ரகசிய கேமராக்கள் எதுவும் கண்டறியப்படவில்லை என்று தெரிவித்தனா். காவல்துறை தரப்பில் சிறப்புப் படை அமைக்கப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இதுதவிர தொழில்நுட்ப விசாரணை குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.