முகப்பு
இந்தியா

எதிர்க்கட்சிகள் அமளி: நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!

அம்பேத்கர் குறித்து அமித் ஷா பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு.

Updated On : 19 டிசம்பர் 2024, 12:00 pm IST
பகிர்:

அம்பேத்கர் குறித்து அமித் ஷா பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவ. 25 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

அதானி மீதான அமெரிக்க நீதிமன்றத்தின் குற்றச்சாட்டு விவகாரத்தைக் கொண்டு எதிர்க்கட்சிகள் தினமும் போராட்டத்தில் ஈடுபட்டதாலும் அவையில் முழக்கமிட்டதாலும் அவை நடவடிக்கைகள் முடங்கின.

Advertisement

Advertisement

இந்நிலையில், மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை பேசிய அமித் ஷா, அம்பேத்கரை அவமதிக்கும் கருத்துகளை தெரிவித்ததாக எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

இதன் தொடர்ச்சியாக, நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து இரண்டாவது நாளாக அமித் ஷாவை கண்டித்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

உள்துறை அமைச்சர் பதவியில் இருந்து உடனடியாக அமித் ஷா விலக வேண்டும் என்றும் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் எம்.பி.க்கள் முழக்கமிட்டனர்.

அவையிலும் இதனை வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் இன்றும் அவை நடவடிக்கைகள் முடங்கின.

காலை அவை தொடங்கியதும் எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் பிற்பகல் 2 மணி வரை இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.