பிரதமர் மீதான தாக்குதல் ஜனநாயக மரபுகளையே கிழித்தெறியும்: ஓம் பிர்லா
மக்களவையில் பிரதமர் மோடி மீது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தாக்குதல் நடத்தவிருப்பதாகத் தகவல்: அவைத் தலைவர் ஓம் பிர்லா
மக்களவையில் பிரதமர் மோடி மீது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தாக்குதல் நடத்தவிருப்பதாக உறுதியான தகவல்கள் கிடைத்ததாக அவைத் தலைவர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.
மக்களவையில் பிரதமர் மோடி மீது தாக்குதல் நடத்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முயற்சிப்பதாகத் தகவல்கள் கிடைத்ததால்தான், அவைக்கு பிரதமரை வர வேண்டாம் என்று வலியுறுத்தியதாக ஓம் பிர்லா கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், "அவையில் பிரதமர் மோடி உரையாற்றும்போது, அவரின் இருக்கையை காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்கள் அடையலாம், எதிர்பாராத ஒன்றை முயற்சிக்கலாம் என்றும் உறுதியான தகவல் எனக்கு கிடைத்தது. இந்தக் காட்சியை அவையில்கூட பார்த்தேன்.
ஏதேனும் சம்பவம் நடந்திருந்தால், அது நாட்டின் ஜனநாயக மரபுகளையே கிழித்தெறியும் ஒரு விரும்பத்தகாததாக இருந்திருக்கும்.
இதனைத் தவிர்க்கவே, அவைக்கு பிரதமர் வருவதைத் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்" என்று கூறினார்.
மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தியை பேச அனுமதிக்க வலியுறுத்தி, புதன்கிழமையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, ஜெனிபென் தாகூர், வர்ஷா கெய்க்வாட், ஜோதிமதி, ஆர். சுதா, கே. காவியா, ஷோபா பச்சாவ் உள்ளிட்ட எதிர்க்கட்சியைச் சேர்ந்த பெண் எம்.பி.க்கள் சுமார் 9 பேர் பிரதமரின் இருக்கையை முற்றுகையுமிட்டனர். இதனையடுத்து, அவை ஒத்திவைக்கப்பட்டது.
பிரதமரின் பாதுகாப்புக்காக அவை ஒத்திவைக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், "பிரதமர் மீது யாரும் கைகளை உயர்த்துவதோ காயப்படுத்த முயற்சிப்பதோ என்ற கேள்விக்கே இடமில்லை. அப்படியொரு திட்டம் இருந்ததாகச் சொல்வது முற்றிலும் தவறு.
இப்போது, அவைத் தலைவருக்குப் பின்னால் பிரதமர் ஒளிந்து கொண்டிருக்கிறார். அவைக்கு வர தைரியமில்லாததால், அவைத் தலைவரை இப்படியெல்லாம் சொல்ல வைக்கின்றனர்" என்று காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி தெரிவித்தார்.