ராமரை அரசியல் கருவியாக்காதீர்கள்: ஆதிர் ரஞ்சன்
ராமரை எல்லோருக்குமான கடவுளாக இருக்க விடுங்கள் என காங்கிரஸ் கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் மக்களவையில் தெரிவித்துள்ளார்.
பாஜக, ராமரைத் தேர்தலில் வெற்றி பெறச் செய்யும் கருவியாக கருத வேண்டியதில்லை என காங்கிரஸ் கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் தெரிவித்துள்ளார்.
சீனா மற்றும் மாலத்தீவுடான வெளியுறவு கொள்கை குறித்தும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர், “தேர்தல் முன்கதவைத் தட்டும்போது நீங்கள் ராமர் பின்னால் (பாஜக) ஒளிந்துக் கொள்கிறீர்கள்” என ஆதிர் ரஞ்சன் நாடாளுமன்றத்தின் மக்களவை விவாதத்தின்போது தெரிவித்தார்.
மேலும், “நாங்கள் எல்லோரும் ராமரை விரும்புகிறோம். அவருக்கான காப்புரிமையை நீங்கள் எடுத்து கொள்ளாதீர்கள். அவரை அரசியல் கருவியாக மாற்றாதீர்கள். எல்லோருக்குமான கடவுளாக ராமரை இருக்க விடுங்கள்” எனத் தெரிவித்தார்.
ஜனாதிபதி உரை இந்தியா-சீனா எல்லையில் ஏற்படும் மோதல்கள் குறித்து எந்த குறிப்பையும் வெளிப்படுத்தவில்லை எனத் தெரிவித்தவர் 2019-ல் நடைபெற்ற புல்வாமா தாக்குதலுக்குப் பதிலளிக்கும்விதமாக இந்திய ராணுவம் பாலாகோட்டில் நடத்திய தாக்குதல் குறித்த ஆதாரங்கள் எதையும் அரசு வெளியிடவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: முதல் முறையாக 6 சதவிகிதம் உயர்ந்த எல்ஐசி பங்குகள்!
சீனா மற்றும் மாலத்தீவு உடனான கொள்கையிலும் இந்த அரசு தோல்வியடைந்துள்ளது எனத் தெரிவித்தார்.