முகப்பு
இந்தியா

கோவாவில் கோபி மஞ்சூரியன் விற்கத் தடை! 

வட கோவாவில் பிரபல உணவுப் பொருளான கோபி மஞ்சூரியன் விற்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:32 PM
கோப்புப்படம்
பகிர்:

வடக்கு கோவாவில் உள்ள குடிமை அமைப்பு ஒன்று தனது அதிகாரத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள சாலையோரக் கடைகளில் பிரபல உணவுப் பொருளான 'கோபி மஞ்சூரியனை' விற்கத் தடை விதித்துள்ளது. கோபி மஞ்சூரியன் உணவில் சுகாதாரமற்ற, உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருள்கள் இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

தெருக்களில் உணவு விற்பனையாளர்கள் கோபி மஞ்சூரியன் விற்பதற்கு மபுசா நகராட்சி அமைப்பு கடந்த வாரம் தீர்மானம் நிறைவேற்றியது என எம்எம்சி தலைவர் பிரியா மிசல் தெரிவித்தார். 

விற்பனையாளர்கள் சுகாதாரமற்ற முறையிலும் செயற்கை நிறங்களைச் சேர்த்தும் கோபி மஞ்சூரியன் தயாரிக்கிறார்கள் என அவர் கூறினார்.  

Advertisement

'ஸ்ரீ போத்கேஷ்வரர் கோயிலின் வருடாந்திரத் திருவிழாவில் கோபி மஞ்சூரியன் விற்க அனுமதிக்கக் கூடாது என கவுன்சிலர் தரக் அரோல்கர் பரிந்துரைத்தார். அதைத் தொடர்ந்து கோயில் திருவிழாவில் அந்த உணவை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது. பின்னர் எம்எம்சி ஆளுகைக்குட்பட்ட பகுதியில் உள்ள கடைகளுக்கும் அந்த தடை நீட்டிக்கப்பட்டது.' என அவர் கூறியுள்ளார்.  

கடந்த 2022ல் மாநில உணவு மற்றும் மருந்துப்பொருள்கள் நிர்வாகம், வட கோவாவில் ஸ்ரீ தாமோதர் கோயில் விழாவில் கோபி மஞ்சூரியன் விற்கும் கடைகளின் எண்ணிக்கையைக் குறைக்குமாறு மோர்முகாவ் நகராட்சி அமைப்பிற்கு சுற்றரிக்கை அனுப்பியது. 

கோபி மஞ்சூரியனில் பயன்படும் சாஸ் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பொடியில் துணி துவைக்கப்பயன்படுத்தும் தூள்கள் உபயோகிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.