முகப்பு
இந்தியா

மணிப்பூரில் காவல் கண்காணிப்பாளர் கடத்தல்: போலீஸ் போராட்டம்!

மணிப்பூரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கடத்தப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 28 பிப்ரவரி, 2024 at 9:22 AM
பகிர்:

மணிப்பூரில் மைத்தேயி ஆயுதம் ஏந்திய கும்பலால் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அமித் குமார் கடத்தப்பட்ட சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநில காவல்துறையினர் துப்பாக்கியை கீழே வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து மணிப்பூரில் பதற்றத்தை கட்டுக்குள் வைக்க ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இம்பால் கிழக்கு பகுதியின் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக இருப்பவர் அமித் குமார். வாங்கேயில் உள்ள அவரது வீட்டை தாக்கிய ஆயுதக் குழு அவரையும், அவரது பாதுகாப்பு காவலரையும் கடத்திச் சென்றனர்.

இதுகுறித்து மணிப்பூர் காவல்துறை வெளியிட்ட செய்தியில்,

“ஆயுதம் ஏந்திய கும்பலால் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கடத்தப்பட்ட சம்பவம் அறிந்ததும் சிறப்புப் படையினர் துரிதமாக செயல்பட்டு உடனடியாக அவரை மீட்டனர். காவல் அதிகாரி நலமுடன் இருக்கிறார். மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். 200 பேர் கொண்ட ஆயுத கும்பல் இந்த தாக்குதல் சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும், ஆயுத கும்பலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அதிகாரம் வழங்கக் கோரியும் மாநில காவல்துறையினர் துப்பாக்கிகளை தரையில் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே, மணிப்பூரில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்கும் விதமாக ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →