மணிப்பூர் மீது மோடி அரசுக்கு அக்கறையில்லை!: காங்கிரஸ்
மணிப்பூர் பற்றி கவலை கொள்வதால்தான் ராகுல் காந்தி தனது நடைபயணத்தை அங்கிருந்து துவங்குகிறார் என மஹிமா சிங் தெரிவித்துள்ளார்.
மணிப்பூரின் தற்போதைய நிலையைப் பற்றி கவலை கொள்வதால்தான் ராகுல் காந்தி தனது பாரத் ஜோடோ நியாய யாத்திரையை மணிப்பூரிலிருந்து துவங்குகிறார் என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மஹிமா சிங் தெரிவித்துள்ளார்.
'பாஜக அரசுக்கு மணிப்பூரைப் பற்றி கவலை இல்லை. அவர்களுக்கு மக்களின் பிரச்னைகளைப் பற்றி கவலை இல்லை' என தகவல் தொடர்பு மற்றும் ஊடக ஒருங்கிணைப்பாளர் மஹிமா தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், 'மணிப்பூரின் இன்றைய நிலை இன்னும் மோசமாகத்தான் உள்ளது. அதைப்பற்றி கவலை கொள்ளும் மிகச்சில தலைவர்களும் ராகுல் காந்தியும் ஒருவர். அதனால்தான் தனது நடைபயணத்தை அங்கிருந்து துவங்க திட்டமிட்டுள்ளார்' எனவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிக்க: கடவுள் தரிசனம் போல எங்குப் பார்த்தாலும் மோடியின் படங்கள்: கார்கே
மேலும் 'தேர்தலுக்காக மட்டுமே இந்த நடைபயணம் மேற்கொள்ளப்படவில்லை. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையும், ஜனநாயகத்தையும் காக்கும் முயற்சி இது' எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மணிப்பூரில் குகி மற்றும் மெய்தியின மக்களுக்கு இடையே நடந்துவரும் வன்முறைச் சம்பங்களால் இதுவரை 180-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.