எதிர்க்கட்சிகளைப் பார்த்து பாஜக அஞ்சுகிறது: ராஷ்டிரிய ஜனதா தளம்
பாஜக தலைவர்கள் எதிர்க்கட்சிகளைப் பார்த்து அஞ்சுகிறார்கள் என ராஷ்டிரிய ஜனதா தளத்தின் எம்.பி. மனோஜ் குமார் ஜா கூறியுள்ளார்.
பாஜகவின் முக்கிய தலைவர்கள் எதிர்க்கட்சிகளைப் பார்த்து பயப்படுகிறார்கள் என ராஷ்டிரிய ஜனதா தளத்தின் மாநிலங்களவை உறுப்பினரான மனோஜ் குமார் ஜா கூறியுள்ளார். பயத்தினால் மத்திய புலனாய்வு அமைப்புகளை பாஜக தவறாகப் பயன்படுத்துகிறது என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
வரும் மக்களவைத் தேர்தலையொட்டி எதிர்க் கட்சிகளின் செயல்பாடுகளைப் பார்த்து மத்திய அரசு கவலை கொள்கிறது எனவும் அவர் கூறினார். தான் அஞ்சும் கட்சிகளுக்கு எதிராக அமலாக்கத்துறை, சிபிஐ, ஐடி ஆகிய துறைகளை பயன்படுத்துகிறது எனக் குற்றம் சாட்டினார்.
ரயில்வே பணிக்கு லஞ்சமாக நிலம் பெறப்பட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது மகன் தேஜஸ்வி யாதவ் ஆகியோருக்கு அமலாக்கத்துறை அழைப்பணை அனுப்பியிருந்ததைத் தொடர்ந்து இந்த குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.
லாலு பிரசாத் கடந்த திங்கள்கிழமை அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் 9 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது. அவரது மகன் தேஜஸ்வி யாதவ் இன்று (ஜன.30) ஆஜராகி விளக்கமளித்துவருவது குறிப்பிடத்தக்கது.