மேற்கு வங்கத்தில் பெண் தாக்கப்பட்ட விவகாரம்: ஒருவர் கைது
மேற்கு வங்கத்தில் நடு வீதியில் பெண் தாக்கப்பட்ட விவகாரத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் நடு வீதியில் பெண் தாக்கப்பட்ட விவகாரத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்காள மாநிலம், உத்தர் தினாஜ்பூரில் உள்ள சோப்ராவில் பெண் உட்பட இருவரை பொதுமக்கள் முன்னிலையில் ஆண் ஒருவர் மூங்கில் கம்பால் சரமாரியாக தாக்குகிறார். இந்த தாக்குதலில் அந்த பெண் கீழே விழுந்துவிட்டார். இருப்பினும் அங்கு கூடியிருந்த மக்கள் யாரும் இந்த சம்பவத்தை தடுக்க முன்வரவில்லை. தாக்குதல் நடத்தியவர் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது.
திருமணத்தை மீறிய உறவில் ஈடுபட்டதாலே அவர்கள் இந்த தாக்குதலுக்கு உள்ளாகியுள்னர். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அபராதமும் விதித்திருக்கின்றனர். கடந்த வாரம் இந்த நிகழ்வு விடியோ இணையதளங்களில் வெளியாகி கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்துக்கு பாஜக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனங்கள் தெரிவித்துள்ளன.
சம்பவம் தொடர்பாக இஸ்லாம்பூர் போலீஸார் தாமாக முன்வந்து ஞாயிற்றுக்கிழமை வழக்குப்பதிவு செய்து தஜேமுல் என்பவரை கைது செய்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே இந்த சம்பவத்தை கவனத்தில் கொண்டுள்ளதாக தேசிய மகளிர் ஆணையமும் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் மேற்கு வங்கத்தில் உத்தர் தினாஜ்பூர் உள்ளிட்ட எங்கும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.