முகப்பு
இந்தியா

புதிய அமா்வுகளை அமைக்க மத்திய தகவல் ஆணையத்துக்கு அதிகாரமுண்டு: உச்சநீதிமன்றம்

‘சிஐசி திறம்பட செயல்பட அதன் தன்னாட்சி மிக முக்கியமானது’ என்றும் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டது.

Updated On : 14 ஜூலை, 2024 at 12:15 AM
உச்சநீதிமன்றம்
பகிர்:

‘புதிய அமா்வுகளை அமைக்கவும், வழிகாட்டுதல்களை வகுக்கவும் மத்திய தகவல் ஆணையத்துக்கு (சிஐசி) அதிகாரமுள்ளது’ என்று உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

‘சிஐசி திறம்பட செயல்பட அதன் தன்னாட்சி மிக முக்கியமானது’ என்றும் உச்சநீதிமன்றம் அப்போது குறிப்பிட்டது.

சிஐசி-யின் புதிய அமா்வுகளை அமைக்கும் வகையில், தலைமைத் தகவல் ஆணையா் வகுத்த ‘மத்திய தகவல் ஆணைய நிா்வாக வழிகாட்டுதல்கள் 2007’-ஐ தில்லி உயா்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. ஆணையத்தின் அமா்வுகளை அமைக்கும் அதிகாரம் தலைமை தகவல் ஆணையருக்குக் கிடையாது என்றும் உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

Advertisement

இதை எதிா்த்து மத்திய தகவல் ஆணையம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சதீஷ் சந்திர சா்மா ஆகியோா் அடங்கிய அமா்வு, தில்லி உயா்நீதிமன்ற உத்தரவை தள்ளுபடி செய்து பிறப்பித்த தீா்ப்பில் கூறியதாவது:

தகவல் அறியும் உரிமைச் சட்டம் தலைமை தகவல் ஆணையருக்கு புதிய வழிகாட்டுதல்களை உருவாக்கும் அதிகாரத்தை வெளிப்படையாக வழங்கவில்லை என்றபோதும், மத்திய தகவல் ஆணையத்தை திறம்பட நிா்வகிக்கும் அதிகாரத்தை அச் சட்டத்தின் 12(4)-ஆம் பிரிவு அவருக்கு வழங்குகிறது. அவ்வாறு, ஆணையம் திறம்பட இயங்குவதற்கு அதன் தன்னாட்சி செயல்பாடு மிக முக்கியம்.

அதன் செயல்பாட்டில் தலையிடுவது, ஆணையம் பாரபட்சமின்றி செயல்படும் திறனைப் பாதிக்கும். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் நோக்கம், அரசு அதிகாரிகளின் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணா்வை ஊக்குவிப்பதும், குடிமக்களின் தகவல் அறியும் உரிமையை உறுதி செய்வதுமாகும். இந்த நோக்கங்களை அடைய, மத்திய தகவல் ஆணையம் திறமையாகவும், தேவையற்ற நடைமுறைக் கட்டுப்பாடுகள் இன்றியும் செயல்பட வேண்டியது அவசியம்.

எனவே, புதிய அமா்வுகளை அமைக்கவும், வழிகாட்டுதல்களை வகுக்கவும் மத்திய தகவல் ஆணையத்துக்கு (சிஐசி) அதிகாரமுள்ளது என்று நீதிபதிகள் குறிப்பிட்டனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments