ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புச் சாவடி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பரபரப்பு நிலவுகிறது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ரஜோரி மாவட்டத்தில் உள்ள பாதுகாப்புச் சாவடியை குறிவைத்து பயங்கரவாதிகள் திங்கள்கிழமை அதிகாலை துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதைத்தொடர்ந்து அப்பகுதியை சுற்றிவளைத்து பாதுகாப்புப் படையினர் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுகுறித்து அதிகாரிகள் அளித்த தகவலின்படி, ரஜோரி மாவட்டத்தில் உள்ள குந்தா பகுதியில் உள்ள பாதுகாப்புச் சாவடியில் அதிகாலை 4 மணியளவில் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், பாதுகாப்புப் படையினர் பதிலடி கொடுத்ததாகவும் தெரிவித்தனர்.
கடந்த சில மாதங்களாக, ஜம்மு பகுதியில் கதுவாவில் ராணுவ வாகனத்தின் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல், தோடா மற்றும் உதம்பூரில் என்கவுன்டர் உள்ளிட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.
முன்னதாக வியாழக்கிழமை, ரஜோரி மாவட்டத்தில் உள்ள சுந்தர்பானி பகுதியில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே சந்தேகத்திற்கிடமான நடமாட்டத்தை அடுத்து பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
மேலும் வியாழக்கிழமை தோடா மாவட்டத்தில் உள்ள கஸ்திகர் பகுதியில் பயங்கரவாதிகளுடனான என்கவுன்டரில் இரண்டு வீரர்கள் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.