ஹேமந்த் சோரன் ஜாமீன்: உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல்முறையீடு தள்ளுபடி!
ஜார்கண்ட் உயர்நீதிமன்ற தீர்ப்பில் தலையிட விரும்பவில்லை எனக் கருத்து.
ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் ஜாமீனுக்கு எதிராக அமலாக்கத்துறை தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அமலாக்கத்துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை திங்கள்கிழமை காலை உச்சநீதிமன்ற நீதிபதிகள் கே.வி.விஸ்வநாதன் மற்றும் பி.ஆர்.கவாய் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அமலாக்கத்துறை சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜு மற்றும் வழக்கறிஞர் ஜோஹெப் ஹொசைன் ஆஜராகி ஹேமந்த் சோரனுக்கு ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய வலியுறுத்தினார்.
தொடர்ந்து, இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது, ஹேமந்த் சோரனுக்கு வழங்கப்பட்டுள்ள பிணை, அமலாக்கத்துறையின் விசாரணையை பாதிக்காது எனத் தெரிவித்தனர்.
இதையடுத்து, விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பில் நாங்கள் தலையிட விரும்பவில்லை எனத் தெரிவித்து மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
2022 ஆம் ஆண்டு அமலாக்கத்துறை பதிவு செய்த நில மோசடி தொடர்பான வழக்கில் கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் தேதி ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி ஹேமந்த் சோரன் தரப்பில் வழக்கு தொடரப்பட்டிருந்த நிலையில், ஜூன் 28-ஆம் தேதி ஜாமீன் வழங்கப்பட்டது.