ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரின் பேரன் மர்மமான முறையில் உயிரிழப்பு!
ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சம்பாய் சோரனின் பேரன் மர்மமான முறையில் உயிரிழப்பு...
ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சம்பாய் சோரனின் பேரன் வீர் சோரன் மணாலியில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
ஜார்க்கண்டின் முன்னாள் முதல்வர் சம்பாய் சோரனின் பேரனான வீர் சோரன் (வயது 19) கடந்த பிப்.22 அன்று ஹிமாச்சலப் பிரதேசத்தின் மணாலிக்கு அவரது நண்பர்கள் சிலருடன் சுற்றுலாப் பயணம் சென்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அவர்கள் அனைவரும் பிப். 23 அன்று மதியம் சுற்றுலாத் தலங்களுக்குச் சென்றுவிட்டு விடுதி அறைக்குத் திரும்பி வந்துள்ளார். அப்போது, வீர் சோரனுக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டதால், அவர் நண்பர்கள் வழங்கிய மருந்துகளை சாப்பிட்டு விட்டு ஓய்வெடுக்கச் சென்றதாகக் கூறப்படுகிறது.
Advertisement
இதையடுத்து, சில மணிநேரம் கழித்து அவரது அறையிலிருந்து பயங்கரச் சத்தம் வந்ததாகவும், அங்குச் சென்று பார்த்தபோது வீர் சோரன் படுக்கையில் கிடந்ததாகவும் அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், அன்றிரவு அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததைத் தொடர்ந்து, அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், வீர் சோரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஆனால், அவரின் மரணத்திற்கான முழுமையான காரணம் குறித்து இதுவரை எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.
இதுகுறித்து, தகவலறிந்தவுடன் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன் மற்றும் வீர் சோரனின் தந்தை பாபுலால் சோரன் ஆகியோர் ராஞ்சியில் இருந்து தில்லி சென்றடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.