கேரளத்தில் மேலும் ஒரு துயரம்!
மழைநீர்த் தொட்டியில் விழுந்து பலியான இரண்டரை வயது குழந்தை
கேரளத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை, மழைநீர்த் தொட்டியில் தவறி விழுந்து, உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளத்தில் பல பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருகிறது. இந்நிலையில், திருவனந்தபுரத்தின் கிளிமனூர் கிராமத்தில் இரண்டரை வயதேயான ரூபா என்ற குழந்தை, நேற்று (ஜூலை 29) மாலை 4.30 மணியளவில் தனது அண்ணன் ஜீவாவுடன் வீட்டின் பின்புறம் விளையாடிக் கொண்டிருந்தார். இதனையடுத்து, தங்கை திடீரென காணாமல் போய்விட்டதாக ஜீவா, அவர்களது பெற்றோரிடம் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, ரூபாவை தேடும் முயற்சியில் ஈடுபட்ட அவர்கள், குழந்தை அருகில் இருந்த முழுமையாக நிரம்பிய மழைநீர் சேமிப்புத் தொட்டியில் விழுந்து கிடந்தது தெரியவந்தது. இதனையடுத்து, குழந்தையை மீட்ட பெற்றோர், உடனடியாக ரூபாவை கடக்கல் தாலுகா மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இருப்பினும், குழந்தை சிகிச்சைப் பலனின்றி, உயிரிழந்து விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து விட்டது. இதனைத் தொடர்ந்து, குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
அதுமட்டுமின்றி, கேரளத்தில் பெய்துவரும் கனமழையால் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, இதுவரையில் 50 பேர் வரையில் பலியாகியுள்ளனர். நூற்றுக்கணக்கானோர் மண்ணுக்குள் புதைந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.