ஜூன் 7-ல் பாஜக கூட்டணி எம்பிக்கள் கூட்டம்!
வரும் ஜூன் 7-ல் பாஜக கூட்டணி எம்பிக்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.
வரும் ஜூன் 7-ல் தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சி எம்பிக்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.
தில்லியில் ஜூன் 7 ஆம் தேதி நடைபெறவுள்ள பாஜக கூட்டணிக் கட்சி எம்பிக்கள் கூட்டத்தில் நரேந்திர மோடியை பிரதமராக தேர்ந்தெடுக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த கூட்டத்தில் பாஜக கூட்டணி ஆட்சி அமைப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்றும், மக்களவை குழுத் தலைவராக பிரதமர் மோடி தேர்வு செய்யப்படுவார் என்றும் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவரை சந்தித்து ஆட்சி அமைப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி உரிமை கோருவார்.
இதனிடையே இன்று (ஜூன் 5) நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை சந்தித்த மோடி, பிரதமர் பதவியை ராஜிநாமா செய்யும் கடிதத்தையும், 17வது மக்களவையை கலைக்கும் அமைச்சரவைக் கூட்டத்தின் பரிந்துரையும் குடியரசுத் தலைவரிடம் கொடுத்தார்.
குடியரசுத் தலைவர் மோடியின் ராஜிநாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டதுடன், புதிய அரசு அமையும் வரை பதவியில் நீடிக்குமாறு பிரதமரையும், மத்திய அமைச்சர்கள் குழுவையும் கேட்டுக் கொண்டார்.
ஜூன் 8 ஆம் தேதி பிரதமராக மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பதவியேற்கவுள்ளதாக முன்னதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.