'இலங்கையிடம் மன்னிப்பு கேட்பாரா மோடி?': ஜெய்ராம் ரமேஷ் கேள்வி
கச்சத்தீவு விவகரத்தில் அச்சுறுத்தும் வகையில் பேசியதற்காக மோடி மன்னிப்பு கேட்பாரா? என்று காங்கிரஸ் மூத்தத் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி.
மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது கச்சத்தீவு விவகரத்தை கையிலெடுத்த நரேந்திர மோடி அரசு, இலங்கையுடனான உறவில் விரிசலை ஏற்படுத்துமாறு பேசியதற்கு பாஜகவினர் மன்னிப்பு கேட்பார்களா என்று காங்கிரஸ் மூத்தத் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் இன்று கேள்வியெழுப்பியுள்ளார்.
நேற்று பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறை பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டதைத் தொடர்ந்து பல நாட்டு அதிபர்களும் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டனர்.
அந்த விழாவில் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவும் கலந்து கொண்டார்.
Advertisement
இதனைத் தொடர்ந்து பாஜக கச்சத்தீவு விவகாரத்தில் பொறுப்பற்ற முறையில் வரலாற்றைத் திரித்துப் பேசியதாக ஜெய்ராம் ரமேஷ் பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “நேற்று பதவியேற்பு விழாவில் இலங்கை அதிபரும் கலந்து கொண்டுள்ளார். நினைவுபடுத்திப் பாருங்கள், கச்சத்தீவு விவகாரத்தை நமது ’மூன்றில் ஒரு பங்கு’ பிரதமர் அவரது கட்சியினருடன் சேர்ந்து தேர்தல் பிரசாரத்தில் எந்தளவு திரித்துப் பொய்யாகப் பேசியுள்ளார் என்று.
பொறுப்பற்ற முறையில் இந்தியா இலங்கை இடையேயான உறவை சீர்குலைக்கும் விதத்தில் பேசினார் பிரதமர். அதற்கு தமிழக மக்கள் தகுந்த பதிலடி கொடுத்துள்ளனர்.
தமிழக மீனவர் சமுதாய பிரச்னைகளை நிரந்தரமாக சரிசெய்ய வழிவகுக்க வேண்டும். ஆனால், மோடியும் அவரது கட்சியினரும் நமது அண்டை நாட்டினரிடம் கொள்கையை மீறி இப்படியொரு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதற்கு மன்னிப்புக் கேட்பார்களா?” என்று பதிவிட்டுள்ளார்.
மக்களவைத் தேர்தல் பிரசாரத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், கச்சத்தீவு விவகாரத்தில் காங்கிராஸின் முன்னாள் பிரதமர்கள் அலட்சியம் காட்டியதாகவும், காங்கிரஸ் இலங்கைக்கு அடங்கிப் போனதாகவும், இந்திய மீனவர்களின் உரிமைகளைப் பறிகொடுத்ததாகவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.