மக்களவைத் தேர்தலில் அளித்த பாஜகவின் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என அருணாசலப் பிரதேச முதல்வராக பதவியேற்ற பெமா காண்டு வியாழக்கிழமை கூறியுள்ளார்.
இதுகுறித்து பெமா காண்டு கூறுகையில், “தொடர்ந்து மூன்றாவது முறையாக நான் முதல்வராக பதவியேற்ற பிறகு, வடகிழக்கில் மத்திய அரசு மேற்கொண்ட வளர்ச்சிப் பணிகளால் பாஜக மீண்டும் மாநிலத்தில் ஆட்சிக்கு வந்துள்ளது.
அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். மக்கள் நலன் மற்றும் வளர்ச்சிக்காக தேர்தல் வாக்குறுதிகளின் அடிப்படையில் அடுத்த 5 ஆண்டுகளில் ஆட்சியை நடத்துவோம். முதல் அமைச்சரவைக் கூட்டத்தில், அரசாங்கத்தின் முதல் 100 நாட்களுக்கான வளர்ச்சித் திட்ட பனிகளை உருவாக்கும். 26 பழங்குடிகள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட துணை பழங்குடியினங்களைக் கொண்ட அருணாசலப் பிரதேசம் இயற்கையில் தனித்துவமானது. நாங்கள் அனைவரின் நலனுக்காகவும், வளர்ச்சியடைந்த மாநிலமாக மாற்றவும் முயற்சிகளை மேற்கொள்வோம்.
மக்கள் அனைவரும் ‘டீம் அருணாசல்’ என்னும் குழுவில் அரசாங்கத்துடன் இணைந்து மாநிலத்தின் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும். பிரதமர் நரேந்திரமோடி மாநிலத்தின் வளர்ச்சிக்கு தனிக் கவனம் செலுத்தி வருகிறார். வரும் ஆண்டுகளில் அருணாசலப் பிரதேசம் வளர்ச்சியடைந்த மாநிலமாக மாறும்.இந்த முறை அமைச்சரவையில் ஒரேயொரு பெண் மட்டும் இடம்பெற்றுள்ளார். அதுபோல 2029 தேர்தலில் போட்டியிட பெண்கள் அனைவரும் தயாராக இருக்க வேண்டும்” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.