பெங்களூருவில் அமேசானில் ஆர்டர் செய்யப்பட்டு, பெறப்பட்ட பார்சலில் இருந்து பாம்பு வந்த சம்பவம் அதிர்ச்சியளித்துள்ளது.
பெங்களூருவில், பெண் ஒருவர் விடியோ கேம் விளையாட்டுச் சாதனமான எக்ஸ்பாக்ஸ் கன்ட்ரோலர் வாங்குவதற்காக, ஆன்லைன் விற்பனைத் தளமான அமேசானில் ஆர்டர் செய்துள்ளார். ஆர்டர் செய்யப்பட்ட எக்ஸ்பாக்ஸ் கன்ட்ரோலரும் அந்த பெண்ணின் வீட்டிற்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.
எக்ஸ்பாக்ஸ் கன்ட்ரோலர் பார்சலைப் பிரித்த அந்த பெண், பார்சலினுள்ளே பாம்பு இருப்பதைக் கண்டு பதறியுள்ளார். பார்சலின் மீது ஒட்டப்பட்டிருக்கும் டேப்பின் மீது பாம்பு சிக்கிக்கொண்டு, அசைவது கண்டு அதிர்ச்சியுற்றுள்ளார். இதனை அந்த பெண் விடியோவும் எடுத்துள்ளார்.
பின்னர், அந்தப் பாம்பினைக் கைப்பற்றி, ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்குள் விடப்பட்டது. கைப்பற்றப்பட்ட பாம்பு, கர்நாடகத்தில் காணப்படும் மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த பாம்பு இனமான ஸ்பெக்டாக்லெட் கோப்ரா எனக் கண்டறியப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து அமேசானுக்கு தகவல் அளித்த பாதிக்கப்பட்ட அந்த பெண், ”முழுமையான பணம் திரும்பப் பெறப்பட்டதாகவும், இருப்பினும் நச்சுப் பாம்புடன் தங்கள் உயிரைப் பணயம் வைத்ததற்காக அவர்களுக்கு என்ன கிடைத்தது” என்று கூறியுள்ளார்.
இந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்கும் விதமாக அமேசானின் இந்திய செய்தித் தொடர்பாளர் தெரிவித்ததாவது, ”எங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் பாதுகாப்பு தான் எங்களுக்கு முன்னுரிமை. வாடிக்கையாளர்களுக்கு நம்பகமான ஷாப்பிங் அனுபவத்தை வழங்குவதற்கு நாங்கள் கடுமையாக உழைக்கிறோம். தவறுகள் நடக்கும் பட்சத்தில், அனைத்து வாடிக்கையாளர்களின் புகார்களையும் நாங்கள் தீவிரமாக எடுத்து, அதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்கிறோம். இந்த சம்பவம் குறித்தும் விசாரித்து வருகிறோம்” என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.