ஜம்மு-காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!
பாரமுல்லாவில் பயங்கரவாதிகள் மீண்டும் துப்பாக்கிச்சூடு நடத்தி அட்டூழியம்.
ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும் 2 பாதுகாப்புப் படையினர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாரமுல்லா மாவட்டத்தின் வாட்டர்காம் பகுதியில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து பாதுகாப்புப் படையினர் இன்று காலை அப்பகுதியை சுற்றிவளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது, பாதுகாப்புப் படையினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கை என்கவுண்டராக மாறியது.
இதையடுத்து, துப்பாக்கிச் சூடுநடைபெற்ற இடத்தில் இரண்டு உடல்கள் காணப்பட்டதாகவும், ஆனால் இதுவரை உடல்கள் மீட்கப்படவில்லை என்றும் மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பாதுகாப்புப்படை வீரர்கள், காவல்துறை அதிகாரி ஒருவர் மற்றும் ராணுவ அதிகாரி காயமடைந்தனர்.
பாரமுல்லா பகுதியில் தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.