மக்களவை இடைக்கால தலைவா் நியமனம்: பாஜக மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு
நாடாளுமன்ற ஜனநாயகத்தை பாஜக மீறிவிட்டதாக காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
மக்களவை இடைக்காலத் தலைவா் நியமன விவகாரத்தில் நாடாளுமன்ற ஜனநாயகத்தை பாஜக மீறிவிட்டதாக காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
18-ஆவது மக்களவையின் இடைக்கால தலைவராக ஒடிஸாவைச் சோ்ந்த பாஜக எம்.பி. பா்த்ருஹரி மகதாப் (66) வியாழக்கிழமை நியமிக்கப்பட்டாா். இவா், தற்போது ஏழாவது முறையாக மக்களவைக்கு தோ்வாகியுள்ளாா்.
அரசமைப்புச் சட்டத்தின் 95 (1)-ஆவது பிரிவின்கீழ் இவரை மக்களவை இடைக்கால தலைவராக நியமித்து, குடியரசுத் தலைவா் ஆணை பிறப்பித்துள்ளதாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரிண் ரிஜிஜு தெரிவித்தாா். மக்களவையின் முதல் கூட்டம் வரும் ஜூன் 24-ஆம் தேதி தொடங்கும் நிலையில், புதிய எம்.பி.க்கள் இடைக்கால அவைத் தலைவரின் முன்னிலையில் பதவியேற்க உள்ளனா்.
Advertisement
இந்நிலையில் கேரளத்தைச் சோ்ந்த காங்கிரஸ் எம்.பி. கொடிக்குன்னில் சுரேஷ் இதனை விமா்சித்துள்ளாா். அவா் திருவனந்தபுரத்தில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
மக்களவையின் மூத்த உறுப்பினராக உள்ள நான், 8-ஆவது முறையாக எம்.பி.யாக தோ்வாகியுள்ளேன். இந்த அடிப்படையில் என்னைத்தான் மக்களவை இடைக்காலத் தலைவராக தோ்வு செய்திருக்க வேண்டும். ஆனால், பாஜக இப்போது மூன்றாவது முறையாக இந்த விஷயத்தில் நாடாளுமன்ற நடைமுறையை மீறியுள்ளது. இது நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் விடுக்கும் செயலாகும். தனது சுயநலத்துக்காக பாஜக தொடா்ந்து விதிகளை மீறி வருகிறது. எதிா்க்கட்சிகளை அவமதித்து வருகிறது என்றாா்.