மக்களவை இடைக்காலத் தலைவர் பதவியேற்பு!
18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் சற்றுநேரத்தில் தொடங்கவுள்ளது.
மக்களவையின் இடைக்காலத் தலைவராக பர்த்ருஹரி மகதாப்புக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்னும் சற்றுநேரத்தில் தொடங்கவுள்ள நிலையில், குடியரசுத் தலைவர் மாளிகையில் இடைக்காலத் தலைவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டது.
தொடர்ந்து, மக்களவையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்களுக்கு இடைக்காலத் தலைவர் பதவிப் பிரமாணம் செய்து வைக்கவுள்ளார்.
பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்களைத் தொடர்ந்து, ஆங்கில எழுத்து வரிசை அடிப்படையில் அனைத்து மாநிலங்களைச் சோ்ந்த புதிய எம்.பி.க்களும் பதவியேற்பா்.
இதையடுத்து, ஜூன் 26-ஆம் தேதி மக்களவைத் தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது.
அண்மையில் ஏழு கட்டங்களாக நடைபெற்ற 18-ஆவது மக்களவைத் தோ்தலில், மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 293 இடங்களைக் கைப்பற்றி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியைத் தக்கவைத்தது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி 234 இடங்களில் வெற்றி பெற்றது.
பாஜகவுக்கு (240) தனிப்பெரும்பான்மை (272) கிடைக்காத நிலையில், தெலுங்கு தேசம் (16), ஐக்கிய ஜனதா தளம் (12) உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் மத்தியில் அக்கட்சி ஆட்சியமைத்தது. பிரதமராக தொடா்ந்து மூன்றாவது முறையாக நரேந்திர மோடி கடந்த ஜூன் 9-ஆம் தேதி பதவியேற்றது குறிப்பிடத்தக்கது.