வயநாடு: ராகுல் காந்தியின் ராஜிநாமா ஏற்பு
ரேபரேலி மக்களவைத் தொகுதியின் உறுப்பினராக ராகுல் காந்தி தொடர்கிறார்.
வயநாடு எம்.பி. பதவியில் இருந்து ராஜிநாமா செய்த ராகுல் காந்தியின் கடிதத்தை மக்களவை இடைக்காலத் தலைவர் பர்த்ருஹரி மகதாப் ஏற்றுக் கொண்டார்.
மேலும், ரேபரேலி மக்களவைத் தொகுதியின் உறுப்பினராக ராகுல் காந்தி தொடர்கிறார்.
18-வது மக்களவைத் தேர்தலில் கேரள மாநிலத்தின் வயநாடு மற்றும் உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி ஆகிய தொகுதிகளில் காங்கிரஸின் ராகுல் காந்தி போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
Advertisement
இதனைத் தொடர்ந்து, வயநாடு தொகுதியின் எம்பி பதவியை ராஜிநாமா செய்வதாகவும் ரேபரேலி தொகுதி உறுப்பினராக தொடரவுள்ளதாகவும் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், வயநாடு தொகுதியின் உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்து மக்களவை செயலகத்துக்கு ராகுல் காந்தி கடிதம் அனுப்பியிருந்தார்.
இன்று காலை 18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் தொடங்கியவுடன் ராகுல் காந்தியின் ராஜிநாமா கடிதத்தை ஏற்றுக் கொண்டதாக இடைக்காலத் தலைவர் அறிவித்தார்.
இந்த நிலையில், இன்று அல்லது நாளை ரேபரேலி மக்களவை தொகுதியின் உறுப்பினராக ராகுல் காந்தி பதவியேற்கவுள்ளார்.
வயநாடு மக்களவைத் தொகுதிக்கு வரவிருக்கும் இடைத்தேர்தலில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.