தில்லியில் அமித் ஷா - தமிழிசை திடீர் சந்திப்பு!
உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார் தமிழிசை சௌந்தரராஜன்.
தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை பாஜக மூத்த தலைவரும், தெலங்கானா, புதுச்சேரி மாநில முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் திடீரென சந்தித்துள்ளார்.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில் மத்திய அமைச்சர் அமித் ஷா, தமிழிசை சௌந்தரராஜனை கண்டித்ததாக கூறப்பட்ட நிலையில் மீண்டும் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
மேலும், அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில், “செங்கோல் என்பது பழங்கால தமிழ் சோழ மன்னர்களின் வரலாற்றில் குறிப்பிடப்பட்ட நீதி, நியாயம், பாரபட்சமற்ற தன்மை, நீதியின் சின்னமாகும். புதிய நாடாளுமன்றத்தில் சென்கோலை நிறுவிய நமது பிரதமருக்கு நன்றி. சமாஜ்வாதி கட்சி எம்.பி.களின் அறியாமை புரிகிறது. செங்கோல் என்பது தமிழ் கலாசாரத்தின் அடையாளம். தமிழ் கலாசாரத்தின் அடையாளம் மட்டுமல்ல, செங்கோல் முடியாட்சி அடையாளம் அல்ல. ஜனநாயகத்தின் அடையாளம். தமிழ்ப் புலவர் ஔவையார் கூறியது போல, வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும், நெல் உயர குடி உயரும், குடி உயர கோல் உயரும், கோல் உயர கோன் உயர்வான். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழாவின் 8 ஆவது நாளில் செங்கோல் அம்மனின் கைகளில் கொடுக்கப்படும். செங்கோல் ஆன்மிக ரீதியிலும் தமிழ்க் கலாசாரத்துடன் தொடர்பு படுத்தப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
ஆனால், தமிழக மக்களின் ஆதரவில் கூட்டணியில் இருக்கும் திமுக - காங்கிரஸ் தலைவர்கள் செயல் மன்னிக்க முடியாதது. அவர்கள் தமிழ் மீதுள்ள அன்பு, தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்காக மட்டுமே என்று தெரிவந்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி நல்லெண்ணத்துடன் செய்யும் எல்லாவற்றிலும், பிரதமருக்கு எதிரானவர்கள் எப்போதும் தவறுகளைக் கண்டுபிடிப்பார்கள். அவர்களின் இந்த அணுகுமுறை கண்டிக்கத்தக்கது” எனக் கூறியுள்ளார்.
முன்னதாக, சமாஜ்வாதி கட்சியின் மோகன்லால்கஞ்ச் எம்பி, ஆர்.கே. சௌத்ரி, “மக்களவையில் இருந்து செங்கோலை அகற்றிவிட்டு, அந்த இடத்தில் இந்திய அரசியல் சாசனத்தை வைக்க வேண்டும்” என்று மக்களவைத் தலைவருக்கு கடிதம் எழுதியிருந்து குறிப்பிடத்தக்கது.