எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் திரிணமூல் காங்கிரஸின் மூத்த தலைவர்
கட்சியின் செயல்பாடு மீது அதிருப்தி தெரிவித்து, தனது எம்எல்ஏ பதவியை திரிணமூல் காங்கிரஸின் மூத்த தலைவர் தபாஸ் ராய் திங்கள்கிழமை ராஜிநாமா செய்தார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, நான் எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்து பேரவைத் தலைவரிடம் அளித்துள்ளேன். நான் தற்போது சுதந்திரப் பறவையாகிவிட்டேன்.
ஜனவரி மாதம் தனது வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியபோது கட்சித் தலைமை தன்னுடன் நிற்கவில்லை என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும் பாஜகவில் இணைவீர்களா என்ற கேள்விக்கு, இது குறித்து நான் எதுவும் கூறப் போவதில்லை எனவும் அவர் பதிலளித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் திரிணமூல் காங்கிரஸின் மூத்த தலைவர் எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்திருப்பது அக்கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.