திரிணமூல் காங்கிரஸ் கட்சி தங்கள் கட்சிக்கு வாக்களிக்கக் கோரி வாக்குச்சாவடியிலிருந்த முகவர்கள் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக பாஜக வேட்பாளர் லாக்கெட் சாட்டர்ஜி குற்றம் சாட்டினார்.
மக்களவைத் தேர்தலுக்கான 5ஆம் கட்டத் தேர்தலையொட்டி மேற்கு வங்கத்தில் ஹூக்ளி, ஹெளரா, பராக்பூர் உள்ளிட்ட 7 தொகுதிகளில் இன்று (மே 20) வாக்குப்பதிவு நடைபெற்றது.
காலையில் விறுவிறுப்புடன் தொடங்கிய வாக்குப்பதிவு மதிய வேளையில் மந்தமானது. பின்னர் மாலையில் மீண்டும் வாக்குப்பதிவு சதவிகிதம் அதிகரித்தது. மாலை 5 மணி நிலவரப்படி மேற்கு வங்கத்தில் 73 சதவிகித வாக்குகள் பதிவானதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
5ஆம் கட்டத் தேர்தலில் (8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில்) அதிக அளவாக பதிவான வாக்குப்பதிவு இதுவாகும்.
இந்நிலையில் ஹுக்ளி மக்களவைத் தொகுதியில், வாக்காளர்களுக்கு திரிணமூல் காங்கிரஸ் கட்சி பணம் கொடுத்ததாக பாஜக மக்களவைத் தொகுதி வேட்பாளர் லாக்கெட் சாட்டர்ஜி குற்றம் சாட்டினார்.
வாக்குச்சாவடியில் இருந்த மக்களிடம் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்கக்கோரி அவர்கள் பணம் கொடுத்ததாகக் குறிப்பிட்டார்.
ஹுக்ளி பகுதி வாக்குச்சாவடியில் சோதனை மேற்கொண்ட பிறகு செய்தியாளர்களுடன் பேசிய அவர், வாக்குப்பதிவு சுமூகமாக நடைபெற்று வருகிறது. 2 - 3 இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது. ஆனால் அதனை சரிசெய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஊழலுக்கு எதிராக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்குச்சாவடி அருகே திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முகவர்கள் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தனர். மேற்கு வங்கத்தில் சுதந்திரமான மற்றும் நேர்மையான முறையில் தேர்தல் ஆணையம் செயல்படும் என நம்புகிறோம் என சாட்டர்ஜி குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.