வங்கதேச எம்.பி. அன்வருல் படுகொலைச் சம்பவத்தில், கூலிப் படையை அமர்த்தி, கொலை செய்ய வைத்தக் குற்றச்சாட்டின் கீழ் ஜிஹாத் ஹவ்லாதர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹனி-டிராப் வலையில் சிக்கவைக்கப்பட்டுள்ளார் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் குடியேறிய வங்கதேசத்தைச் சேர்ந்த ஜிஹாத் கைது செய்யப்பட்டு, அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அன்வருல்லை யார் கொன்றார்கள், எதற்காகக் கொன்றார்கள், எங்கே அவரது உடல் என எண்ணற்றக் கேள்விகள் விசாரணை அமைப்பின் முன் உள்ளது. ஜிஹாத் கைதின் மூலம் முதல் கேள்விக்கு விடை காணப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், விசாரணை இன்னமும் நடைபெற்று வருகிறது.
சம்பவத்தன்று என்ன நடந்தது என்பது குறித்து டாக்கா காவல்துறையினர் ஓரளவுக்கு கண்டுபிடித்து விட்டதாகவும், முதற்கட்ட விசாரணையில், ஹனி-டிராப் முறையில் அவர் கொலையாளிகளிடம் சிக்கியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
அதாவது, ஷிலாஸ்தி ரஹ்மான் என்ற பெண், வங்கதேச எம்.பி.யிடம் பேசி அவரை கொலையாளிகளிடம் கொடுத்துள்ளார். கொலையாளிகள், பணம் கொடுத்து ஷிலாஸ்தியை, அன்வருலை பிடித்துக் கொடுக்க பேரம் பேசியிருக்கிறார்கள். திட்டமிட்டபடி ஷிலாஸ்தி அன்வருலை, கொல்கத்தா குடியிருப்புக்கு அழைத்துச் சென்றுள்ளார். அந்த குடியிருப்புக்குள் சென்றதும் அன்வருல் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
டாக்கா காவல்துறையினரால் ஷிலாஸ்தி ரஹ்மான் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவத்தில் வங்கதேசத்தைச் சேர்ந்த அமெரிக்க குடிமகன் அக்தருஸ்ஸாமன் என்பவர்தான் மூளையாக செயல்பட்டிருக்கலாம் என்றும், இவர்தான் அன்வருல் கொலையாளிகளுக்கு ரூ.5 கோடி கொடுத்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. தற்போது அக்தருஸ்ஸாமன் எங்கிருக்கிறார் என்பது காவல்துறையினருக்குத் தெரியவரவில்லை.
வங்கதேச எம்.பி. அன்வருல் உடல் பாகங்கள் மிக மோசமாக சிதைக்கப்பட்டு, அது கிடைத்தாலும் கூட, மனித உடல் பாகம்தானா என்பதை உறுதி செய்ய முடியாத அளவுக்கு கொலையாளிகள் பல்வேறு பகுதிகளிலும் வீசிச்சென்றிருக்கலாம் என்று டாக்கா மாநகரக் காவல்துறை கூடுதல் ஆணையர் ஹருண் தெரிவித்துள்ளார்.
அதாவது, கொலையாளிகள், உடலை அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைத்திருக்கலாம் என்றும், சில உடல் பாகங்களை அவர்கள் குளிர்பதனப் பெட்டிக்குள் வைத்திருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும், அதற்கான சில ஆதாரங்கள் கிடத்திருப்பதால், அது குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
வங்கதேச எம்.பி. அன்வருல் அஸீம் அனார் மாயமாகி, அவர் கொலை செய்யப்பட்டார் என்ற தகவல் உறுதி செய்யப்பட்ட நிலையில், அதன் பின்னணியில் பல திடுக்கிடும் தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது.
முதலில், வங்கதேச எம்.பி.யை கொலை செய்ய அவரது நெருங்கிய நண்பா் ஒருவா் கொலையாளிகளுக்கு ரூ.5 கோடி கொடுத்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக மேற்கு வங்க சிஐடி உயரதிகாரி தெரிவித்திருந்தார். எம்.பி.யின் நண்பா் அமெரிக்க குடிமகன் என்றும் அவர் கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
இந்த நிலையில், அவர் கொலை செய்யப்பட்ட கொல்கத்தா குடியிருப்பில், அவரது உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு, பல்வேறு பிளாஸ்டிக் பைகளில் போடப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டிருக்கலாம் என்பது காவல்துறையினர் விசாரணையில் தெரிய வந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதாவது, அன்வருலை கொலை செய்த கும்பல், அந்த வீட்டின் ஒரு கழிப்பறையில் அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி தசைகளை தனியே பிரித்தெடுத்து அவற்றை மஞ்சள் தூளில் போட்டு சில நாள்கள் வரை கெடாமல் இருக்கும்படி பார்த்துக்கொண்டுள்ளனர். எலும்புகளையும் துண்டுத் துண்டாக வெட்டி சிறு சிறு பிளாஸ்டிக் பைகளில் போட்டுள்ளனர். பிறகு அவற்றை வெளியே கொண்டு சென்று தடயமே கிடைக்காத அளவுக்கு குற்றவாளிகள் எங்காவது வீசியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
மேலும், துளியும் தடயமே இல்லாத வகையில், அந்த குடியிருப்பின் கழிப்பறை ஆசிட் கொண்டு பல முறை கழுவப்பட்டிருக்கிறது. பிறகுதான் குற்றவாளிகள் அந்தக் குடியிருப்பிலிருந்து வெளியேறியிருக்கிறார்கள்.
வங்கதேசத்தில் ஆளும் அவாமி லீக் கட்சியின் எம்.பியான அன்வருல் அஸீம் அனாா் (56), கொல்கத்தாவில் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக தனிப்பட்ட பயணமாக கடந்த மே 12-ஆம் தேதி வந்தாா். பாராநகா் பகுதியில் உள்ள தனது நண்பா் கோபால் பிஸ்வாஸின் வீட்டில் தங்கியிருந்த அவா், மறுநாள் மருத்துவரை சந்திக்கச் செல்வதாக கூறிவிட்டு சென்றவா் திரும்பி வரவில்லை.
இந்தச் சூழலில், கொல்கத்தாவில் அன்வருல் படுகொலை செய்யப்பட்டதாகவும், இச்சம்பவம் தொடா்பாக டாக்காவில் 3 போ் கைது செய்யப்பட்டதாகவும் வங்கதேச அரசு புதன்கிழமை தெரிவித்தது.
கொல்கத்தாவின் நியூ டவுண் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இக்கொலை நடந்துள்ளது. அன்வருல் உடல் இன்னும் கைப்பற்றப்படாத நிலையில், மேற்கு வங்க சிஐடி போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். இதுகுறித்து சிஐடி உயரதிகாரி ஒருவா் வியாழக்கிழமை கூறுகையில், ‘அன்வருலின் நெருங்கிய நண்பரான அமெரிக்க குடிமகன் ஒருவருக்கு குடியிருப்பை அதன் உரிமையாளா் வாடகைக்கு விட்டிருந்தாா். எம்.பி.யை கொலை செய்ய அந்த நண்பா்தான் கொலையாளிகளுக்கு ரூ.5 கோடி கொடுத்தது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. திட்டமிட்டு இந்தச் கொலைச் சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளது’ என்றாா்.
சம்பந்தப்பட்ட குடியிருப்பிலுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, அடையாளம் தெரியாத 2 ஆண்கள் மற்றும் ஒரு பெண்ணுடன் அன்வருல் வந்ததும், கடந்த மே 15 முதல் 17 வரையிலான நாள்களில் எம்.பி.யைத் தவிர மற்றவா்கள் அடுத்தடுத்து குடியிருப்பில் இருந்து வெளியேறியதும் கண்டறியப்பட்டது.
எனவே, அவரது உடலை கொலையாளிகள் பல்வேறு பகுதிகளில் வீசி எறிந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.