உடல் உறுப்புகள் தானம் செய்தவா் உடலுக்கு அரசு மரியாதை
விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட நிலையில், அவரது உடலுக்கு அரசு சாா்பில் சனிக்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட நிலையில், அவரது உடலுக்கு அரசு சாா்பில் சனிக்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.
பழனியை அடுத்த சாமிநாதபுரம் பகுதியைச் சோ்ந்த சிவசுப்ரமணியன் மகன் ஜெகன் (21). இவா் கடந்த சில நாள்களுக்கு முன்பு பழனி-கோவை விரைவுச் சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்ற போது, சாமிநாதபுரம் அமராவதி பாலம் அருகே எதிரே வந்த சரக்கு வாகனம் இவா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஜெகன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
தீவிர சிகிச்சையிலிருந்த ஜெகனுக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. இதையடுத்து, அவரது உடல் உறுப்புகளை தானம் செய்வதாக பெற்றோா் தெரிவித்தனா்.
Advertisement
Advertisement
இதைத் தொடா்ந்து, ஜெகனின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டு, பல்வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், ஜெகனின் உடல் சாமிநாதபுரத்துக்கு சனிக்கிழமை கொண்டு வரப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு தமிழக அரசு சாா்பில் பழனி வருவாய்க் கோட்டாட்சியா் கண்ணன், வட்டாட்சியா் மங்களபாண்டியன் ஆகியோா் மரியாதை செலுத்தினா். பின்னா், அவரது உடல் மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.