5ம் கட்ட தேர்தலிலேயே 310 இடங்களை மோடி பெற்றுவிட்டார்- அமித் ஷா
5ம் கட்ட தேர்தலிலேயே 310 இடங்களை மோடி பெற்றுவிட்டார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
பிகார் மாநிலம் கரகட்டில் இன்று நடைபெற்ற இறுதிகட்ட மக்களவைத் தேர்தல் பேரணியில் பேசிய அவர், 6ம் கட்ட தேர்தல்கள் முடிவடைந்துள்ளன. 5ம் கட்ட தேர்தலிலேயே ஆட்சியமைக்க தேவையான 310 இடங்களை பிரதமர் மோடி பெற்றுவிட்டார். 6, 7வது கட்ட தேர்தல்களில் 400 இடங்களை கடந்துவிடுவார்.
இந்தப் போராட்டம் மிகப்பெரியது. ஒருபுறம், ரூ.12 லட்சம் கோடிக்கு மேல் ஊழல் செய்த இந்தயா கூட்டணி. மறுபுறம், தனது பொது வாழ்வில் ஒரு ரூபாய் கூட ஊழல் செய்யாத பிரதமர் மோடி. தீபாவளிக்கும் ஓய்வெடுக்காமல் ஆண்டு முழுவதும் உழைப்பவர். இன்று, எதிர்க்கட்சிகளிடம் நான் கேட்க விரும்புகிறேன்.
லாலு பிரசாத் யாதவ், 15 ஆண்டுகள் முதல்வராகவும், 10 ஆண்டுகள் மத்திய அமைச்சராகவும் இருந்தார்.
ராகுல் காந்தியின் நான்கு தலைமுறைகள் நாட்டை ஆட்சி செய்தனர். ஆனால் அவர்கள் ஏழைகளுக்கு என்ன செய்தார்கள்?. ஏழை மற்றும் மிகவும் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த மோடி, நாட்டின் பிரதமரானவுடன், ஏழைகளுக்கான பணிகளை செய்யத் தொடங்கிவிட்டார். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
பிகாரில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. கரகட் தொகுதிக்கு ஜூன் 1ம் தேதி கடைசி கட்டமாக தேர்தல் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.