முகப்பு
இந்தியா

வெள்ளக்காடாக மாறிய கேரளம்: 4 பேர் பலி!

கேரளத்தில் வெள்ளம்: கொச்சியில் சிவப்பு எச்சரிக்கை

Updated On : 28 மே, 2024 at 2:11 PM
பகிர்:

கேரளத்தில் கொட்டித் தீர்க்கும் மழையினால் மாநிலத்தில் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. கொச்சி பகுதியில் மேக வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிற வேளையில் மழையினால் 4 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோட்டயம் மற்றும் எர்ணாகுளம் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்திய வானிலை மையம் இரு நகரங்களுக்கும் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதே போல பத்தனம்திட்டா, ஆழப்புழா மற்றும் இடுக்கி ஆகிய பகுதிகளுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொச்சின் பல்கலைக்கழகத்தில் 90 நிமிடங்களில் 98.4மிமி அளவுக்கு மழைப்பதிவானதாக பல்கலைக்கழகத்தின் பேராசியர் எஸ்.அபிலாஷ் தெரிவித்துள்ளார். காக்கநாடு பகுதியில் உள்ள ஐடி பார்க் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.

கொச்சியில் வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில் தாழ்வான பகுதிகளில் உள்ள பல வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது.

கொச்சி அருகிலுள்ள வெங்கூர் பகுதியில் நீச்சல் அடிக்க சென்ற 10 வகுப்பு படிக்கும் மாணவர் நீரில் மூழ்கியுள்ளார். ஆழப்புழாவை சேர்ந்த அரவிந்த் வீட்டுக்கு வெளியே நிற்கும்போது தென்னை மரம் விழுந்ததில் பலியாகியுள்ளார். வடக்கு கேரளத்தில் படகு கவிழ்ந்து மீனவர் ஆபிரகாம் பலியாகியுள்ளார்.

கோட்டயம் மாவட்டத்தின் உயரமான பகுதிகளில் நிலச்சரிவுகள் பதிவாகியுள்ளன. மத்திய கேரளத்தில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த வாரத்தின் இறுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கவுள்ளதால் கேரளத்தில் அதிக மழைப்பொழிவு இருக்கும் என மத்திய வானிலை மையம் கணித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →