முகப்பு
இந்தியா

ஹரியாணா முதல்வராக நயாப் சைனி: விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

இரண்டாவது முறையாக முதல்வராக நயாப் சைனி பதவியேற்கிறார்.

Updated On : 17 அக்டோபர், 2024 at 6:28 AM
முதல்வர் நயாப் சிங் சைனி(கோப்புப்படம்)
பகிர்:

ஹரியாணா மாநிலத்தின் முதல்வராக நயாப் சிங் சைனி இன்று பதவியேற்கவுள்ள நிலையில், பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.

பஞ்ச்குலாவில் நடைபெறும் விழாவில் இரண்டாவது முறையாக முதல்வராக பதவியேற்கும் சைனிக்கு ஹரியாணா ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார்.

ஹரியாணா மாநிலத்தில் அக்.5-ம் தேதி நடந்துமுடிந்த சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது. காங்கிரஸ் 37 தொகுதிகளில் வென்று எதிர்க்கட்சியாக உள்ளது.

முன்னதாக நேற்று ஹரியாணாவில் முன்னாள் முதல்வர் நயாப் சிங் சைனி(54) பாஜக சட்டமன்ற உறுப்பினர்களின் தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அதனைத்தொடர்ந்து அவர் ஆளுநர் பண்டரு தத்தாத்ரேயாவை சந்தித்து மாநிலத்தில் அடுத்த ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

இந்த நிலையில் ஹரியாணாவின் முதல்வராக நயாப் சிங் சைனி இன்று பதவியேற்கவுள்ளார். பஞசகுலாவின் ஹலிமார் மைதானத்தில் பதவியேற்பு விழாவுக்காகப் பெரிய மேடை தயார் செய்யப்பட்டுள்ளது. இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி மற்றும் ஹரியாணா முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டார், எதிர்க்கட்சியினர் மற்றும் பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்களும் கலந்து கொள்கின்றனர்.

இந்த விழாவில் சைனியின் அமைச்சரவை அமைச்சர்களும் பதவியேற்க உள்ளனர். ஹரியாணா முதல்வர் உள்பட 14 அமைச்சர்கள் பதவியேற்கின்றனர். விழாவையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முழு கட்டுரையைப் படிக்க →