முகப்பு
இந்தியா

அடுத்த தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா பெயர் பரிந்துரை!

சஞ்சீவ் கன்னாவை அடுத்த தலைமை நீதிபதியா டி.ஒய். சந்திரசூட் பரிந்துரைத்திருப்பது பற்றி...

Updated On : 17 அக்டோபர் 2024, 9:22 am IST
சஞ்சீவ் கன்னா - ANI
பகிர்:

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா பெயரை தற்போதைய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் பரிந்துரைத்தார்.

கடந்த நவம்பர் 2022 முதல் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்து வரும் டி.ஒய். சந்திரசூட், வருகின்ற நவம்பர் 11-ஆம் தேதியுடன் ஓய்வு பெறவுள்ளார்.

இந்த நிலையில், அடுத்த தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னாவை நியமிக்க மத்திய சட்ட அமைச்சகத்துக்கு டி.ஒய். சந்திரசூட் பரிந்துரைத்துள்ளார்.

Advertisement

Advertisement

இந்த பரிந்துரையை மத்திய அரசு ஏற்று, குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தவுடன் சஞ்சீவ் கன்னா தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கவுள்ளார்.

அடுத்த 6 மாத காலம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவி வகிக்கவுள்ள சஞ்சீவ் கன்னா, அடுத்தாண்டு மே 13-ஆம் தேதியுடன் ஓய்வு பெறவுள்ளார்.

சஞ்சீவ் கன்னா யார்?

1983-ஆம் ஆண்டு தில்லி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக சஞ்சீவ் கன்னா பதிவு செய்தார். தொடக்க காலகட்டத்தில் தில்லி மாவட்ட நீதிமன்றத்திலும், பின்னர் தில்லி உயர் நீதிமன்றத்திலும் வழக்கறிஞராகப் பயிற்சி பெற்று வந்தார்.

வருமான வரித் துறையின் முதுநிலை ஆலோசகராக நீண்ட காலம் பணியாற்றிய சஞ்சீவ் கன்னா, 2004ஆம் ஆண்டு தில்லி அரசின் நிலை ஆலோசகராக நியமிக்கப்பட்டார். கூடுதல் அரசு வழக்கறிஞராக பல்வேறு குற்ற வழக்குகளில் தில்லி உயர்நீதிமன்றத்தில் ஆஜராகி வாந்திட்டுள்ளார்.

இதையடுத்து, 2005ஆம் ஆண்டில் தில்லி உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியான சஞ்சீவ் கன்னா, அடுத்தாண்டே நிரந்தர நீதிபதியாக நியமிகப்பட்டார். அப்போது, டெல்லி நீதித்துறை அகாடமியின் தலைவராகவும், தில்லி சர்வதேச நடுவர் மன்றத்தின் தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.

2019 ஜனவரி மாதம் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்ற சஞ்சீவ் கன்னா, உச்சநீதிமன்றத்தின் சட்ட சேவைக் குழுவின் தலைவராக 2023ஆம் ஆண்டில் இருந்துள்ளார்.

தற்போது தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் செயல் தலைவராகவும், போபாலில் உள்ள தேசிய நீதித்துறை அகாடமியின் ஆலோசகராகவும் உள்ளார்.

ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பு சட்டம் பிரிவு 370-ஐ ரத்து செய்தது, தேர்தல் பத்திர திட்டத்தை ரத்து செய்தது உள்ளிட்ட வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றத்தின் அரசியலமைப்பு அமர்வில் சஞ்சீவ் கன்னாவும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments