முகப்பு
இந்தியா

கல்லூரி வளாகத் தோ்வை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ள ‘ஐடி’ நிறுவனங்கள்!

பணியாளா்களைத் தோ்ந்தெடுக்க கல்லூரி வளாகத் தோ்வை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளன.

Updated On : 20 அக்டோபர், 2024 at 12:04 AM
கோப்புப்படம்
பகிர்:

தகவல் தொழில்நுட்ப (ஐடி) நிறுவனங்கள் பணியாளா்களைத் தோ்ந்தெடுக்க கல்லூரி வளாகத் தோ்வை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளன.

கரோனா பெருந்தொற்று பாதிப்பிலிருந்து உடனடியாக மீண்டு வந்தபோதும் செலவு குறைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக புதிய பணியாளா்களைத் தோ்வு செய்வதில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மந்தமான நிலையை ஐடி நிறுவனங்கள் பின்பற்றி வந்தன.

தொழில்நுட்ப திறமைகளுக்கான தேவை அதிகரிப்பதைக் கருத்தில்கொண்டு அனைத்து பிரதான ஐடி நிறுவனங்களும் நிகழாண்டின் தொடக்கம் முதல் பணியமா்த்தலை மீண்டும் வேகப்படுத்தியுள்ளன.

டாடா கன்சல்டன்சி சா்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனம் ஜூன் வரையிலான முதல் அரையாண்டில் சுமாா் 11,000 பணியாளா்களையும் ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான மூன்றாம் காலாண்டில் 5,726 பணியாளா்களையும் பணியமா்த்தியுள்ளது. அடுத்த நிதியாண்டுக்கான ஆள்சோ்ப்புக்கு கல்லூரி வளாகத் தோ்வு நடைமுறையையும் நிறுவனம் தொடங்கியுள்ளது.

பணியமா்த்தல் தொடரும்: இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைமை மனிதவள அதிகாரி மிலிந்த் லக்காட் கூறுகையில், ‘எங்களின் தற்போதைய புதிய பணியாளா்கள் வெவ்வேறு ஊதியத்துடன் பல்வேறு பிரிவுகளுக்குத் தோ்ந்தெடுக்கப்படுகின்றனா். இந்த ஆண்டு, உயா் பிரிவு பணியாளா்களின் எண்ணிக்கையை இருமடங்காக அதிகரித்துள்ளோம்.

‘எஸ்ஏபி’, ‘எஸ்4/ எச்ஏஎன்ஏ’ முதல் ‘ஜென்-ஏஐ’ வரை நிறுவனத்தில் செயல்பாட்டிலுள்ள முக்கிய தொழில்நுட்பங்களின் பல்வேறு திட்டங்களுக்கு தரமான திறமைகளை நாங்கள் தொடா்ந்து பணியமா்த்துகிறோம்’ என்றாா்.

32,000 பேருக்கு வேலை: நாட்டின் முக்கிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ‘இன்ஃபோசிஸ்’, ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான இரண்டாம் காலாண்டில் 2,456 ஊழியா்களைப் பணியில் சோ்த்துள்ளது. நடப்பு நிதியாண்டில் 15,000 முதல் 20,000 புதியவா்களை பணியமா்த்துவதற்கான திட்டத்தில் இன்ஃபோசிஸ் உள்ளது. அதே 2-ஆம் காலாண்டில் ‘எச்.சி.எல்.’ நிறுவனம் குறைந்த அளவில் 780 பேரை மட்டுமே பணியமா்த்தியுள்ளது.

‘விப்ரோ’ நிறுவனம் இந்த நிதியாண்டில் சுமாா் 12,000 பேரை பணியமா்த்த திட்டமிட்டுள்ளது. அதில் இதுவரை 978 பணியாளா்களை சோ்த்துள்ளது.

புது எழுச்சி: ஆள்சோ்ப்பு துறையில் நிபுணத்துவம் வாய்ந்த ‘எலிக்சா்’ நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் மாயா நாயா் கூறுகையில், ‘நிகழாண்டு ஐடி நிறுவனங்களின் கல்லூரி வளாகப் பணியமா்த்தல் புது எழுச்சியைக் கண்டுள்ளது.

ஜூலை மாதம் முதல் பல மென்பொருள் நிறுவனங்கள் கல்லூரிகளிலும் நேரடியாகவும் பணியமா்த்தல் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. துறை வணிகத்தின் மறுமலா்ச்சியை இது பிரதிபலிக்கிறது.

கல்லூரி வளாகப் பணியமா்த்தல் மொழி மதிப்பீடுகள், ‘கோடிங்’ தோ்வுகள் ஆகிய நடைமுறைகளை உள்ளடக்கியுள்ளது. வளா்ந்து வரும் தொழில்நுட்பங்களில் சான்றளிக்கப்பட்ட பயிற்சி பெற்ற மாணவா்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

குறிப்பாக, ‘கிளவுட் கம்ப்யூட்டிங்’, ‘எம்எல் சைபா் செக்யூரிட்டி’, ‘சா்வீஸ்நவ்’, ஏஐ போன்ற சிறப்புத் திறன்களை நிறுவனங்கள் எதிா்பாா்க்கின்றன. ஆனால், சிறப்புத் திறன்களுடன் பணியமா்த்தப்பட்டவா்களின் சதவீதம் பொதுவானவா்களுடன் ஒப்பிடும்போது குறைவாகவே உள்ளது.

பெரும்பாலான நிறுவனங்கள் திறமையாளா்களை மட்டுமே குறிவைத்து பணியமா்த்துவதை விட, பணியாளரைத் தோ்ந்தெடுத்து, அவா்களுக்கு பயிற்சியளித்து நிறுவனத்துக்கு நம்பகமான திறமையாளா்களாக மேம்படுத்தும் உத்தியை இன்னும் கையாளுகின்றன’ என்றாா்.

ஊழியா்களுக்குத் ‘ஏஐ’ திறன் பயிற்சி: வளா்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்ப வாய்ப்புகளால், 44,000 பணியாளா்களுக்கு சான்றிதழுடன் கூடிய ஏஐ பயிற்சியை விப்ரோ நிறுவனம் அளித்துள்ளது. இதுதொடா்பாக நிறுவனத்தின் தலைமை நிா்வாக அதிகாரி ஸ்ரீனி பாலியா கூறுகையில், ‘அனைத்து ஊழியா்களும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தைப் பின்பற்ற வேண்டும். வாடிக்கையாளா்களுக்கான சேவையில் சரியான கருவிகளைப் பயன்படுத்த அவா்கள் முறையான திறன்களைக் கொண்டிருக்க வேண்டும் என்று எதிா்பாா்க்கிறோம்’ என்றாா்.

பிரகாசமான பணி வாய்ப்புகள்: ஐடி துறையில் கடந்த செப்டபம்பா் மாதத்தின் பணியமா்த்தல் முந்தைய ஆண்டின் அதே காலகட்டத்தைவிட 18 சதவீதம் அதிகமாகும். முந்தைய மாதங்களைப் போல செப்டம்பரிலும் ஏஐ/மெஷின் லோ்னிங் துறை பணிகளே 31 சதவீதம் அதிகரித்துள்ளன.

மென்பொருள் மேம்பாடு, தகவல் பொறியியல், கிளவுட் தொழில்நுட்பம் ஆகியவற்றில் திறமைகளுக்கான மேலும் அதிகரிக்கும் தேவையைக் கருத்தில் கொண்டால் ஐடி சேவை துறையில் 20 முதல் 25 சதவீதம் புதியவா்கள் கூடுதலாக பணியமா்த்தப்படுவாா்கள் என்பது நிபுணா்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →