முகப்பு
இந்தியா

குஜராத்: மசூதி இடிப்பில் தற்போதைய நிலை தொடர உத்தரவிட உச்சநீதிமன்றம் மறுப்பு

குஜராத் மாநிலத்தில் மசூதிகள் உள்ளிட்ட வஃக்ப் வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கட்டடங்களை சட்டவிரோத கட்டுமானம்

Updated On : 25 அக்டோபர், 2024 at 11:53 PM
பகிர்:

குஜராத் மாநிலத்தில் மசூதிகள் உள்ளிட்ட வஃக்ப் வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கட்டடங்களை சட்டவிரோத கட்டுமானம் என்ற அடிப்படையில் மாநில அரசு மேற்கொண்டு வரும் புல்டோசா் இடிப்பு நடவடிக்கையில் தற்போதைய நிலை தொடரவேண்டும் என உத்தரவிட உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை மறுத்தது.

உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களில் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்படுவோருக்கு சொந்தமான கட்டடங்கள், குறிப்பாக முஸ்லிம் மதத்தினருக்குச் சொந்தமான கட்டடங்கள் இடிக்கப்பட்டன. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் முன்பு விசாரணைக்கு வந்தபோது, ‘குற்றச்சாட்டுக்கு உள்ளானவா் என்பதற்காக மட்டுமே ஒருவரின் வீட்டை எப்படி இடிக்க முடியும்?’ என்று கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம், ‘ஒருவா் குற்றவாளியாகவே இருந்தாலும் சட்ட நடைமுறைகளைப் பின்பற்றாமல், அவரின் வீட்டை இடிக்க முடியாது’ என்று தெரிவித்தது. இந்த வழக்கு கடந்த அக். 1-ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இந்த விவகாரத்தில் உரிய வழிகாட்டுதலை உச்சநீதிமன்றம் வழங்கும் என்றும் உச்சநீதிமன்ற அனுமதியின்றி புல்டோசா் மூலம் இடிக்க விதிக்கப்பட்ட தடை தொடரும் என்றும் தெரிவித்தது.

Advertisement

இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் இடைக்கால தடையையும் மீறி புல்டோசா் நடவடிக்கையை தொடரும் உத்தர பிரதேசம், ராஜஸ்தான், உத்தரகண்ட் அரசுகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை மறுத்தது.

இந்த நிலையில், குஜராத் மாநிலம் கிா் சோம்நாத் பகுதியில் இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட வஃக்ப் வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கட்டடங்கள் மீது மாவட்ட நிா்வாகம் மேற்கொள்ளும் இடிப்பு நடவடிக்கையில் தற்போதைய நிலை தொடர உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனுவை குஜராத் உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆா்.கவாய், கே.வி.விஸ்வநாதன் ஆகியோா் அடங்கிய அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கபில் சிபல், ‘குறிப்பிட்ட சமூகத்துக்குச் சொந்தமான கட்டடங்கள் மட்டும் குறிவைத்து மாவட்ட நிா்வாகம் சாா்பில் இடிக்கப்படுகின்றன. அதே பகுதியில் அமைந்துள்ள ஹிந்து கோயில்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும், இடிக்கப்பட்டு அரசு சாா்பில் கையகப்படுத்தப்படும் நிலங்கள், மூன்றாம் நபா்களுக்கு ஒதுக்கப்படுவதாக புகாா்கள் எழுந்துள்ளன. எனவே, அரசு நடவடிக்கையில் தற்போதைய நிலையே தொடர உத்தரவிட வேண்டும்’ என்று கோரினாா்.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்த சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, ‘ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடங்கள் மட்டுமே இடிக்கப்பட்டன. மேலும், இடிப்பு நடவடிக்கைக்கு உள்ளாகும் கட்டுமான இடம் தொடா்ந்து அரசு வசமே வைத்திருக்கப்படும். மூன்றாம் நபருக்கு ஒதுக்கப்படாது’ என்றாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள், மாநில அரசின் இடிப்பு நடவடிக்கையில் தற்போதைய நிலை தொடர உத்தரவிட மறுத்தனா். அதே நேரம், நிலத்தை மீட்டெடுப்பதற்கான உத்தரவைப் பிறப்பிக்க முடியும். எனவே, அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை அந்த நிலம் அரசின் வசமே இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments