பாகிஸ்தான் உளவாளியுடன் தொடர்பு... குஜராத்தில் ஒருவர் கைது!
இந்தியக் கடலோரக் காவல்படையின் கப்பல்கள் குறித்து முக்கியத் தகவல்களை பாகிஸ்தான் உளவாளிக்கு தெரிவித்த நபர் கைது...
இந்தியக் கடலோரக் காவல்படையின் கப்பல்கள் குறித்து முக்கியத் தகவல்களை பாகிஸ்தான் உளவாளிக்குத் தெரிவித்த குஜராத்தைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குஜராத் மாவட்டத்தின் போர்பந்தர் நகரில் வசிப்பவர் பங்கஜ் கோட்டியா. இவர் அங்குள்ள கப்பல் தளத்தில் தொழிலாளராக உள்ளார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு இவரை ஃபேஸ்புக் மூலம் தொடர்பு கொண்ட பாகிஸ்தானைச் சேர்ந்த உளவாளி, ரியா என்ற பெண் பெயரில் அறிமுகமாகியுள்ளார்.
தன்னை இந்தியக் கப்பல் படையின் மும்பை பிரிவில் பணியாற்றுவதாகக் கூறி அறிமுகப்படுத்திக் கொண்ட பாகிஸ்தான் உளவாளி தொடர்ந்து கோட்டியாவுடன் தொடர்பில் இருந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, கோட்டியா அவரிடமிருந்து கடந்த 8 மாதங்களாக ரூ. 26,000 பணத்தை யுபிஐ செயலி மூலம் பெற்று இந்தியக் கடலோரக் காவல்படையின் கப்பல்கள் குறித்தும், கப்பல் தளம் குறித்தும் முக்கியத் தகவல்களைப் பகிர்ந்து வந்துள்ளார்.
இதையும் படிக்க | வன்முறையைக் கைவிட்டு இந்தியாவுடன் நட்பை ஏற்படுத்த முயல வேண்டும்: பாகிஸ்தானுக்கு ஃபரூக் அப்துல்லா வலியுறுத்தல்
அவர் தொடர்பில் இருந்த நபருடைய எண்ணை அதிகாரிகள் சோதனை செய்தபோது அது பாகிஸ்தானில் இருப்பது தெரியவந்தது.
இது தொடர்பாக கோட்டியாவை பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் கீழ் இந்திய அரசிற்கு எதிராக செயல்பட்டதாகக் கூறி குஜராத் பயங்கரவாதத் தடுப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.
மேலும், அவரிடம் தகவல்களைக் கேட்டறிந்த ரியா என்ற பெயர் கொண்ட பாகிஸ்தான் உளவாளி மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.