ஐந்து நாள் தாமதத்துக்குப் பிறகு, தங்களது மாத ஊதியத்தை ஹிமாசல அரசு ஊழியர்கள் வியாழக்கிழமை பெற்றுள்ளனர்.
இது குறித்து விளக்கம் அளித்த ஹிமாசல முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, பொருளாதார பற்றாக்குறை மற்றும் அதனை ஒழுங்குபடுத்துவதற்கான நடவடிக்கையாக, அரசு ஊழியர்களுக்கு ஊதியம் தாமதமாக வழங்கப்பட்டுள்ளதாகவும் முன்கூட்டியே ஊதியம் வழங்குவதால் கடனுக்கான வட்டி 7.5 சதவீதத்தை கணக்கிட்டால் கூடுதலாக ரூ.3 கோடி செலவாகும் என்று விளக்கம் கொடுத்துள்ளார்.
ஹிமாசல மாநில அரசு ஊழியர்களுக்கு, பொருளாதார நெருக்கடி காரணமாக, தாமதமாக ஊதியம் வழங்குவது குறித்து முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் முதல்வர் நேற்று தெரிவித்திருந்த நிலையில் இன்று ஊதியம் வழங்கப்பட்டுள்ளது.
அதாவது, மாதத்தின் கடைசி அல்லது மாதப் பிறப்பின் முதல் நாளில் ஊழியர்களுக்கு ஊதியத்தை வழங்குவதால், வட்டித் தொகை ரூ.3 கோடி கூடுதலாக செலவாகிறது என்பதால், பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கையாக தாமதமாக ஊதியம் வழங்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார நெருக்கடியான காலக்கட்டத்தை தாண்டிவிட்டோம், பொருளாதாரத்தை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம், இதனால், பொருளாதாரத்தில் தன்னிறைவு கொண்ட மாநிலமாக ஹிமாசலம் மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து மாநில அரசு ஊழியர்கள் கூறுகையில், மாதம் பிறந்ததுமே ஊதியம் வந்துவிடும். இதுவரை வரலாற்றிலேயே எந்த அரசு ஊழியரும் தாமதமாக ஊதியம் பெற்றதில்லை. கடன் தவணைகளை செலுத்த வேண்டியவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டாம் என வங்கிகளுக்கு அறிவுறுத்துமாறு அரசைக் கேட்டுக்கொண்டுள்ளோம் என்று தெரிவித்துள்ளனர்.
எதிர்க்கட்சிகள் இந்த நடவடிக்கைக்கு கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.