கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது மேலும் ஓர் ஊழல் வழக்கு!
அரசுக்கு விளம்பரக் கட்டணம் அளிக்காமல் மோசடி செய்ததாக புகார்
கர்நாடகத்தில் முதல்வர் சித்தராமையாவின் முந்தைய ஆட்சியில் அரசுக்கு விளம்பரக் கட்டணம் அளிக்காமல் மோசடி செய்துள்ளதாக பாஜக மூத்த தலைவரான என்.ஆர். ரமேஷ் புகார் அளித்துள்ளார்.
கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது பெங்களூரு எம்எல்ஏக்கள்/எம்.பி.க்கான சிறப்பு நீதிமன்றத்தில் புகார் அளித்த பாஜக தலைவர் என்.ஆர். ரமேஷ் தெரிவித்ததாவது, ``கர்நாடகத்தில் 2013 முதல் 2018 வரையிலான சித்தராமையாவின் ஆட்சியில், பெங்களூரு மாநகராட்சியின் பேருந்து பணிமனைகளில் அரசின் சாதனைகளை விளக்கும் விளம்பரங்களை பரப்புவதற்கான கட்டணமாக ரூ. 68.14 கோடியை கர்நாடக அரசுக்கு செலுத்த வேண்டியிருந்தது.
ஆனால், அந்த கட்டணத்தை முதல்வர் சித்தராமையா செலுத்தாமல் இருந்தார். சொத்து வரி, வரைபட ஒப்புதல் கட்டணம், வர்த்தக உரிமக் கட்டணம், சாலை தோண்டுதல் கட்டணம், விளம்பரக் கட்டணம் முதலானவை மூலம் கிடைக்கும் வருவாய் ஆதாரங்களைக் கொண்டுதான், அந்தந்த துறைகளின் அதிகாரிகள், ஊழியர்களின் சம்பளத்திற்காகவும், பூங்காக்கள், தெரு விளக்குகள், சேதமடைந்த சாலைகளின் பராமரிப்புக்காகவும்தான், பெங்களூரு மாநகராட்சியில் ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ. 10000 கோடி வருவாய் ஈட்டப்படுகிறது.
Advertisement
Advertisement
இந்த நிலையில்தான், கர்நாடக அரசுக்கு சித்தராமையாவின் அரசு மொத்தம் ரூ. 12.98 கோடி கட்டணம் செலுத்த வேண்டும் என்று, அப்போதைய பெங்களூரு மாநகராட்சியின் சிறப்பு நிதி ஆணையர் 2017 ஆம் ஆண்டில் ஜூலை 5 ஆம் தேதியில் கோரிக்கை அறிவிப்பு விடுத்திருந்தார்.
இருப்பினும், ஆணையரின் கோரிக்கையை சித்தராமையா அரசு புறக்கணித்து விட்டது. இதனைத் தொடர்ந்து, அந்த கட்டண மோசடி புகாரை, இரண்டாவது முறையாக ஆட்சியமைத்த சித்தராமையா அரசு முற்றிலும் மூடி மறைத்து விட்டது.
அதாவது, சித்தராமையா அரசின் அழுத்தம் காரணமாக, எந்த அறிவிப்பும் இல்லாமல் 68.14 கோடி ரூபாய் மோசடி புகாரை, லோக் ஆயுக்தா காவல்துறை 2024 ஆம் ஆண்டில் ஜூலை 26 ஆம் தேதியில் முழுவதுமாக மூடியது.
இந்த நடவடிக்கையை எதிர்த்துதான், மக்கள் பிரதிநிதிகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் ஒரு தனியார் புகார் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முதல்வர் சித்தராமையா மற்றும் இதில் தொடர்புடைய பிறருக்கு எதிரான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி நீதிமன்றத்தில் தனியார் புகார் பதிவு தாக்கல் செய்யப்பட்டுள்ளது’’ என்று கூறியுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.