ஹரியாணாவில் ராகுலின் திடீர் வருகை ஏன்?
விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்றுவரும் ஹரியாணாவைச் சேர்ந்தவரின் குடும்பத்தினரைச் சந்தித்தார், ராகுல்.
அமெரிக்காவில் விபத்தில் சிக்கி, சிகிச்சை பெற்று வரும் ஹரியாணாவைச் சேர்ந்தவரை சந்தித்து, ராகுல் நலம் விசாரித்துள்ளார்.
அமெரிக்காவில் பணிபுரியும் ஹரியாணாவைச் சேர்ந்த அமித் காந்தி என்பவர், சில மாதங்களுக்கு முன்பாக விபத்தில் சிக்கி, தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், சமீபத்தில் அமெரிக்கா சென்றிருந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சிகிச்சை பெற்று வரும் அமித்தை சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, இந்தியா வந்தடைந்த ராகுல் காந்தி, இன்று காலை 6 மணியளவில் அமித் குடும்பத்தினர் வசிக்கும் ஹரியாணாவில் உள்ள கர்னலுக்கு சென்று, அவர்களிடமும் நலம் விசாரித்துள்ளார்.
யாரும் எதிர்பாராத வகையில் அமைந்தது, ராகுல் காந்தியின் திடீர் வருகை என்று தெரிவித்த உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள், தங்களுக்குகூட ராகுல் வருகை குறித்து தெரிவிக்கப்படவில்லை என்று கூறினர்.
ராகுலை சந்தித்த பின்பு அமித்தின் குடும்பத்தினர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ``அமித் தற்போது அமெரிக்காவில் வசிக்கிறார். நாங்கள் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், நிலத்தை விற்றும், வீட்டை அடமானம் வைத்தும்தான், அவருக்கு நிதியளித்தோம்.
ஆனால், சில மாதங்களுக்கு முன்பு, அமித் ஒரு விபத்தில் சிக்கினார். தற்போது, அவர் மோசமான நிலையில் இருக்கிறார்; அவரால் சரியாக சாப்பிடக்கூட முடியாமல், நிறைய பிரச்னைகளைச் சந்தித்து வருகிறார். இந்த நிலையில்தான், ராகுல் அவரை அமெரிக்காவில் சந்தித்துள்ளார். தொடர்ந்து, இங்கு வந்து எங்களையும் சந்தித்தார்’’ என்று தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, ராகுலைக் கண்டவுடன் கூடிய அப்பகுதி மக்கள், கிராமத்தைச் சேர்ந்த பல இளைஞர்கள் வாழ்வாதாரத்திற்காக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாகத் தெரிவித்தனர்.
ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 15 நாள்களே உள்ள நிலையில், ஹரியாணாவுக்கு திடீர் வருகை மேற்கொண்டுள்ளார், ராகுல். கடந்தாண்டும், இதேபோல ஹரியாணா சென்ற ராகுல், விவசாயிகளுடன் சேர்ந்து, டிராக்டர் ஓட்டியதுடன், அவர்கள் கொண்டுவந்த உணவையும் சாப்பிட்டார்.