முகப்பு
இந்தியா

தில்லியின் மூன்றாவது பெண் முதல்வர்!

தில்லி அமைச்சரவையில் மாற்றம் நிகழ வாய்ப்புள்ளதாகத் தகவல்

Updated On : 21 செப்டம்பர், 2024 at 6:30 AM
அதிஷி (கோப்புப் படம்)
பகிர்:

தில்லியின் புதிய முதல்வராக ஆம் ஆத்மியின் அதிஷி இன்று பதவியேற்கவுள்ளார்.

தில்லியின் முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் ராஜிநாமா செய்ததையடுத்து, அடுத்த முதல்வரை தேர்ந்தெடுக்கும்பொருட்டு, செப். 17 ஆம் தேதியில் ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் தில்லியின் புதிய முதல்வராக அதிஷி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டிருந்தார்.

இதன்மூலம், அடுத்தாண்டு தில்லி சட்டப்பேரவை தேர்தல் வரை அதிஷி முதல்வராக இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, முதல்வராக பதவியேற்கவுள்ள அதிஷியுடன், ஆம் ஆத்மியின் மூத்த தலைவர்களான கோபால் ராய், கைலாஷ் கெலாட், சவுரப் பரத்வாஜ், இம்ரான் உசேன் ஆகியோருடன் சேர்ந்து, முதல் முறையாக எம்எல்ஏவாக பதவியேற்கும் முகேஷ் அஹ்லாவத் என மொத்தம் 6 பேர் இன்று (செப். 21) பதவியேற்கவுள்ளனர்.

தில்லியின் புதிய அமைச்சரவையில் துறைகள் மறுசீரமைக்கப்படுகிறதா என்பதும் இன்றுதான் தெரிய வரும்.

அரவிந்த் கேஜரிவால் ஆட்சியின்போது நிதி, வருவாய், பொதுப்பணித்துறை, மின்சாரம், கல்வி உள்ளிட்ட 13 முக்கிய துறைகளை அதிஷி வகித்துள்ளார். மேலும், தில்லியின் அரசுப் பள்ளிகளில் கல்வியை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தவர்.

2015 ஆம் ஆண்டில் கட்சியில் ஆலோசகராகவும், 2020 ஆம் ஆண்டில் ஒரு எம்எல்ஏவாகவும் இருந்த அதிஷி, 2024 ஆம் ஆண்டில் தில்லியின் இளம்வயது முதல்வராக உள்ளார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக முன்னாள் மாணவரும், ரோட்ஸ் அறிஞருமான அதிஷி, தில்லியில் சுஷ்மா சுவராஜ், ஷீலா தீட்சித் ஆகியோருக்குப் பிறகு மூன்றாவது பெண் முதல்வர் என்ற பெருமையையும் பெறவுள்ளார்.

கலால் கொள்கை முறைகேடு வழக்கில் ஜாமீனில் வெளிவந்த தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவா்களுடன் இணைந்து நிர்வாகிகள் மற்றும் தொண்டா்கள் மத்தியில் செப். 15 ஆம் தேதியில் உரையாற்றினார்.

உரையின்போது கேஜரிவால் பேசியதாவது, தில்லி சட்டப்பேரவைத் தோ்தல் வரும் பிப்ரவரியில் நடக்கவுள்ளது. ஆனால், தேசிய தலைநகரின் தோ்தலை மகாராஷ்டிரத்துடன் சோ்த்து வரும் நவம்பா் மாதத்திலேயே நடத்த வேண்டும் என்று நான் கோருகிறேன்.

பாஜக என்னை ஊழல்வாதி என்று நிரூபிக்க முயற்சிக்கிறார்கள். மக்கள் எனக்கு நோ்மை சான்றிதழ் கொடுத்த பிறகுதான் முதல்வா் நாற்காலியில் அமருவேன்.

நான் நோ்மையானவனா என்று மக்களிடம் கேட்கிறேன். அவா்கள் பதிலளிக்கும் வரை இனி நான் முதல்வா் நாற்காலியில் அமர மாட்டேன்’’ என்று தெரிவித்திருந்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →