முகப்பு
இந்தியா

சபரிமலை கோயிலில் பெண்கள் நிற்பதைப் போன்று விடியோ பரப்பியவர் மீது நடவடிக்கை!

சபரிமலை ஐயப்பன் கோயில் சந்நிதானத்தின் 18 படிகள் அருகே இரண்டு இளம் பெண்கள் நிற்பது போன்ற விடியோ சமூக வலைதளங்களில் பரவியது குறித்து போலீஸார் வெள்ளிக்கிழமை விசாரணையைத் தொடங்கினர்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:17 PM
பகிர்:

சபரிமலை ஐயப்பன் கோயில் சந்நிதானத்தின் 18 படிகள் அருகே இரண்டு இளம் பெண்கள் நிற்பது போன்ற விடியோ சமூக வலைதளங்களில் பரவியது குறித்து கேரள போலீஸார் வெள்ளிக்கிழமை விசாரணையைத் தொடங்கினர்.

கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை கோயிலின் 18 படிகளுக்குப் பக்கத்தில் இரண்டு பெண்கள் இருமுடி கட்டி நிற்பதைப் போன்று போலியாக சித்தரிக்கப்பட்ட விடியோ சமூக வலைதளங்களில் வியாழக்கிழமை பரவியது.

இதையடுத்து சைபர் பிரிவு போலீஸார் தானாக முன்வந்து இதுகுறித்து வழக்குப் பதிவு செய்ததாக பத்தனம்திட்டா மாவட்டக் காவல்துறைத் தலைவர் கூறினார்.

அதைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், ராஜேஷ் என்ற இளைஞரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு போலியாக சித்தரிக்கப்பட்ட விடியோ முதன்முதலில் பகிரப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. 

இரண்டு இளம்பெண்கள் இருமுடி கட்டியது போன்ற படங்களை சபரிமலை ஐயப்பன் கோயிலின் படிகளுக்கு அருகில் நிற்பது போன்று எடிட் செய்து சமூக வலைதளங்களில் அவர் பரப்பியது தெரியவந்தது. 

இதையடுத்து, மத உணர்வுகளை புண்படுத்துதல் மற்றும் ஐயப்ப பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்தி வேண்டுமென்றே கலவரத்தை உருவாக்க முயன்றது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருவதாகவும், கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட காவல்துறை தலைவர் தெரிவித்தார்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிரம்மச்சாரி வடிவில் ஐயப்பன் இருப்பதால், 10 முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் அக்கோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.