முகப்பு
இந்தியா

தில்லியில் குற்ற சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்தது! காரணம் என்ன?

முதல் காலாண்டில் தலைநகரான தில்லியில் குற்ற சம்பவங்களின் எண்ணிக்கை முன்பை விடக் குறைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 13 ஏப்ரல், 2025 at 4:37 PM
கோப்புப் படம்
பகிர்:

முதல் காலாண்டில் தலைநகரான தில்லியில் குற்ற சம்பவங்களின் எண்ணிக்கை முன்பை விடக் குறைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் காவல் துறையினரின் ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டதே இதற்கு முக்கியக் காரணம் என காவல் துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து தில்லி காவல் துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது,

ஜனவரி 1 முதல் மார்ச் 31ஆம் தேதி வரையிலான முதல் காலாண்டில், முந்தைய தரவுகளை ஒப்பிடும்போது தில்லியில் குற்ற சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த மூன்று ஆண்டு தரவுகளை ஒப்பிட்டுப்பார்க்கும்போது அதிக கவனம் செலுத்த வேண்டிய பகுதிகளைக் கண்டறிய முடியும்.

2025-ல் தலைநகரில் 107 கொலைகள் நடந்துள்ளன. கடந்த ஆண்டில் 105 கொலைகள் நடந்திருந்தாலும் 2023 உடன் ஒப்பிடும்போது இது குறைவாகும். 2023-ல் 115 கொலைச் சம்பவங்கள் அரங்கேறியிருந்தன. அதாவது கடந்த மூன்று ஆண்டுகளில் 6.95% குறைந்துள்ளன.

2023-ல் 105 கொலை முயற்சி வழக்குகள் பதிவாகியிருந்தன. 2024-ல் 203 கொலை முயற்சியும், இதுவே 2025-ல் 168 கொலை முயற்சி வழக்குகள் பதிவாகியுள்ளன. 2023 உடன் ஒப்பிடும்போது 6.32% அதிகமாகும்.

திருட்டு வழக்குகள் 2024-ல் தொடர்ச்சியாக அதிகரித்து வந்தது (424 வழக்குகள்). 2023-ல் 375 திருட்டு வழக்குகள் பதிவான நிலையில், 2025-ல் 315 வழக்குகள் பதிவாகியுள்ளன. இது 25.7% குறைவாகும்.

வழிப்பறி அல்லது செயின் பறிப்பு சம்பவங்கள் தில்லி சாலைகளில் நிகழும் முக்கியமான குற்றமாகும். 2025ஆம் ஆண்டு 37.69% குறைந்துள்ளது. 2025-ல் 1,199 வழிப்பறி வழக்குகள் பதிவாகியுள்ளன. இதுவே 2024-ல் 1,952 வழக்குகளும், 2023-ல் 1,812 வழக்குகளும் பதிவாகியிருந்தன.

தில்லியில் பெண்களுக்கு எதிரான குற்றங்களும் 12.3% குறைந்துள்ளது. 2023-ல் 422 வழக்குகள் பதிவான நிலையில், 2025-ல் பெண்களுக்கு எதிராக 370 வழக்குகள் பதிவாகியுள்ளன எனக் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.