ரூ.7 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட நக்சல் தம்பதி சரண்!
சத்தீஸ்கரில் தேடப்பட்டு வந்த நக்சல்கள் சரண்டைந்துள்ளதைப் பற்றி...
சத்தீஸ்கரின் கபிர்தம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரால் வெகுமதி அறிவித்து தேடப்பட்டு வந்த நக்சல் தம்பதி சரணடைந்துள்ளனர்.
மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தோர் உள்ளடக்கிய மாவோயிஸ்ட் படையில் இயங்கி வந்த ரமேஷ் (எ) அடம் குட்டு (வயது 29) மற்றும் அவரது மனைவியான சவிதா (எ) லச்சி ஒயாம் (21) ஆகிய இருவரும் கபிர்தாமின் கவ்ராதா பகுதியிலுள்ள காவல் துறையினரிடம் சரண்டைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனிதாபிமானமற்ற மாவோயிஸ்ட் கொள்கைகள் மற்றும் கடுமையான வனப்பகுதி வாழ்க்கை ஆகியவற்றின் மீது உண்டான அவநம்பிக்கையினால் அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாக காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
Advertisement
இந்நிலையில், தற்போது சரணடைந்துள்ள ரமேஷ் மீது ரூ.5 லட்சம் மற்றும் மற்றும் சவிதா மீது ரூ.2 லட்சம் அளவிலான வெகுமதி அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்தனர்.
கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்கள் நக்சல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் 2019-ல் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கையின்போது ரமேஷின் உடலில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து அவர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
முன்னதாக, கடந்த 2017 முதல் மூன்று மாநிலங்களும் இணையும் காட்டுப்பகுதியில் தங்களது தளத்தை அமைக்க நக்சல்கள் முயன்று வருவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
தற்போது சரணடைந்துள்ள நக்சல்கள் இருவருக்கும் அரசின் திட்டத்தின்படி ரூ.25,000 வழங்கப்பட்டு அவர்களது மறுவாழ்விற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிக்க:இந்திய வீரரை சிறைப்பிடித்த பாகிஸ்தான் ராணுவம்!