ஜம்மு - காஷ்மீர் செல்கிறார் ராகுல்!
ராகுல் காந்தி நாளை ஜம்மு - காஷ்மீர் செல்கிறார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி நாளை(ஏப்.25) ஜம்மு - காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகருக்குச் செல்லவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமில் கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் பாகிஸ்தான் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் சிலர் சரமாரியாக நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 இந்தியர்கள் பரிதாபமாக உயிரிழந்தது இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், அமெரிக்காவின் பாஸ்டனுக்கு கடந்த சனிக்கிழமை பயணம் மேற்கொண்டிருந்த ராகுல் காந்தி, தனது பயணத்தை பாதியில் ரத்து செய்துவிட்டு தில்லி திரும்பினார். இன்று மாலை நடைபெற்ற அனைத்துக்கட்சிக் கூட்டத்திலும் ராகுல் காந்தி கலந்துகொண்டார்.
ஏற்கெனவே, பஹல்காம் தாக்குதல் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜம்மு - காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா ஆகியோருடன் தொலைபேசியில் ராகுல் காந்தி பேசியிருந்தார்.
நாளை ஜம்மு - காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகர் செல்லும் ராகுல் காந்தி பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் காயமடைந்தது மருத்துவமனையில் உள்ளவர்களை சந்தித்து ஆறுதல் கூற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
இதையும் படிக்க: கராச்சியில் நேரு, அயூப் கையெழுத்திட்ட சிந்து நதி உடன்பாடு! நேருவை வரவேற்ற லட்சம் பேர்!