சாதிவாரிக் கணக்கெடுப்பு: காங்கிரஸ் கொள்கையை ஏற்றது பாஜக - ராகுல்
சாதிவாரிக் கணக்கெடுப்பில் பல முக்கிய கேள்விகளுக்கு பதில் இல்லை என்றார் ராகுல் காந்தி.
சாதிவாரிக் கணக்கெடுப்பு விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் கொள்கையை பாஜக ஏற்றுள்ளதாக அக்கட்சியின் மக்களவைக் குழு தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை ராகுல் காந்தி இன்று (ஏப். 30) நேரில் சந்தித்தார்.
இதனைத் தொடர்ந்து தில்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களுடன் பேசிய ராகுல் காந்தி, சாதிவாரிக் கணக்கெடுப்பு குறித்துப் பேசினார்.
ராகுல் காந்தி பேசியதாவது,
''சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தும்படி பலமுறை பாஜக அரசிடம் கேட்டுள்ளோம். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் அழுத்தத்திற்கு மத்திய அரசு தற்போது பணிந்துள்ளது.
சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்திக்காட்டுவோம் என நாடாளுமன்றத்தில் கூறியிருந்தோம். சாதிவாரிக் கணக்கெடுப்பில் செயற்கையாக உருவாக்கப்பட்ட பெரும் சுவர் தடையாகவே உள்ளது. நாட்டில் 4 சாதிகள் மட்டுமே உள்ளதாக பிரதமர் முன்பு பேசியிருந்தார்.
ஆனால், தற்போது என்ன நடந்தது எனத் தெரியவில்லை; 11 ஆண்டுகளுக்குப் பிறகு சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு பிரதமர் நரேந்திர மோடி ஒப்புக்கொண்டுள்ளார்.
சாதிவாரிக் கணக்கெடுப்பில் பல முக்கிய கேள்விகளுக்கு பதில் இல்லை. சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்ற அறிவிப்பை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் இதனை நேர்மையாகவும் வெளிப்படைத்தன்மையுடவும் அரசு நடத்த வேண்டும்.
இதற்கு கால நிர்ணயம் செய்ய வேண்டியது அவசியம். அதாவது எப்போது சாதிவாரிக் கணக்கெடுப்பு தொடங்கி முடிக்கப்படும் என்பதை அறிவிக்க வேண்டும். இந்தக் கணக்கெடுப்பின் மூலம் நாட்டிலுள்ள 90% மக்கள் அதிகார பலத்தைப் பெறுவார்கள்.
சாதிவாரிக் கணக்கெடுப்பில், முன்னோடியாக தெலங்கானா மாநிலம் உள்ளது. இதனை எப்படி நடத்தி முடிக்க வேண்டும் என்பதற்கான செயல் திட்டம் அம்மாநிலத்திடம் உள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு நாங்கள் உதவத் தயாராக இருக்கிறோம்.
சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த தெலங்கானா, பிகார் என இரு மாநிலங்கள் உதாரணங்களாக உள்ளன. ஆனால் இரண்டுக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது'' எனக் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க | சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும்: அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்!