விமானத்தில் கரப்பான் பூச்சிகள்: மன்னிப்பு கேட்ட ஏர் இந்தியா!
சான் பிரான்சிஸ்கோவில் இருந்து மும்பை வந்த ஏர் இந்தியா விமானத்தில் கரப்பான் பூச்சி இருந்தது பற்றி...
சான் பிரான்சிஸ்கோவில் இருந்து மும்பை வந்த ஏர் இந்தியா விமானத்தில் கரப்பான் பூச்சி இருந்ததால் பயணிகள் அசௌகரியத்துக்கு ஆளானதற்கு ஏர் இந்தியா மன்னிப்பு கோரியுள்ளது.
சான் பிரான்சிஸ்கோவிலிருந்து கொல்கத்தா வழியாக மும்பை வந்த ஏஐ180 விமானத்தில் இரண்டு கரப்பான்பூச்சிகள் இருந்ததை 2 பயணிகள் கவனித்துள்ளனர். இதுகுறித்து ஊழியர்களிடம் புகார் அளிக்கவே அவர்களுக்கு இருக்கை மாற்றித் தரப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதுபற்றி ஏர் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"சான் பிரான்சிஸ்கோவிலிருந்து கொல்கத்தா வழியாக மும்பை வந்த ஏஐ180 விமானத்தில் துரதிர்ஷ்டவசமாக, சில சிறிய கரப்பான் பூச்சிகள் இருந்ததால் 2 பயணிகள் சிரமப்பட்டனர். எங்கள் ஊழியர்கள் உடனடியாக அந்த பயணிகளை வேறு இருக்கைகளுக்கு மாற்றினர்.
கொல்கத்தாவில் எரிபொருள் நிரப்பியபோது விமானம் முழுமையாக சுத்தம் செய்யப்பட்டது. பின்னர் விமானம் சரியான நேரத்தில் மும்பைக்கு புறப்பட்டது. சுத்தம் செய்தபோதிலும் பூச்சிகள் நுழைந்துவிடுகின்றன. இதுதொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்று மீண்டும் நிகழாமல் தடுக்க சரியான நடவடிக்கைகளை மேற்கொள்வோம். பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்" என்று கூறப்பட்டுள்ளது.