முகப்பு
இந்தியா

ரூ. 7,900 கோடி கூடுதலாக கடன் பெற மத்திய அரசிடம் கேரளம் கோரிக்கை

நிகழாண்டில் ரூ.7,900 கோடி கூடுதல் கடன் பெற கேரளத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் அம்மாநில அரசு கோரியுள்ளது.

Updated On : 12 ஆகஸ்ட், 2025 at 5:10 AM
கேரள முதல்வர் பினராயி விஜயன்
பகிர்:

நிகழாண்டில் ரூ.7,900 கோடி கூடுதல் கடன் பெற கேரளத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் அந்த மாநில அரசு கோரியுள்ளது. வரும் ஓணம் பண்டிகைச் செலவை காரணம் காட்டி கேரள அரசு மேற்கண்ட அனுமதியை கேட்டுள்ளது.

இதுதொடா்பான விரிவான அறிக்கையை கேரள நிதியமைச்சா் கே.என். பால்கோபல் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனிடம் திங்கள்கிழமை அளித்தாா்.

அதில், ‘மாநிலத்துக்கு உடனடி தேவையான நிதி உதவி குறித்தும் கடன் பாதிப்பால் கேரளம் சந்தித்து வரும் பல்வேறு சவால்கள் குறித்தும் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.

Advertisement

மேலும், ‘கூடுதலாக ரூ.7,877.57 கோடி கடன் பெற அனுமதிக்க வேண்டும். மாநிலத்திடம் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட ரூ.4,288.16 கோடியை விடுவிக்க வேண்டும்.

தேசிய நெடுஞ்சாலைக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு 25 சதவீதம் இழப்பீட்டை ஏற்றுக் கொண்ட ஒரே மாநிலம் கேரளம் ஆகும். இந்தத் தொகையை கடன் பெற்று மாநில அரசு ஈடு செய்து வருகிறது.

நிகழ் நிதியாண்டில் எந்தவித நிபந்தனையுமின்றி கேரளத்துக்கு நிா்ணயிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக ரூ.6,000 கோடியும், வெளிச் சந்தை கடன் மூலம் ரூ.1,877.57 கோடியும் கடன் பெற அனுமதி அளிக்க வேண்டும்.

பிடித்தம் செய்யப்பட்ட ரூ.3,323 கோடி உத்தரவாத மீட்பு நிதியை (ஜிஆப்எஃப்) உடனடியாக விடுவிக்க வேண்டும்’ என்று அறிக்கையில் கேரளம் கோரியுள்ளது.