வாயில்லா ஜீவன்கள் அழிக்க வேண்டிய பிரச்னை அல்ல என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
தில்லி மற்றும் என்சிஆர் பகுதிகளில் சுற்றித் திரியும் அனைத்து தெருநாய்களையும் பிடித்து 8 வாரங்களுக்குள் காப்பகங்களில் அடைத்து பராமரிக்க உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.
மேலும், இந்த உத்தரவை கடுமையாக அமல்படுத்த வேண்டும் எனவும் ஒரு நாய்கூட தெருக்களில் இருக்கக் கூடாது என்றும் தில்லி அரசு மற்றும் மாநகராட்சி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைக்கு இடையூறு செய்யும் நோக்கில் நடந்துகொள்ளும் மக்கள் மற்றும் விலங்கு ஆர்வலர்கள் அல்லது அமைப்புகளின் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:
”தில்லி மற்றும் என்சிஆர் பகுதிகளில் இருந்து அனைத்து தெருநாய்களையும் அகற்ற வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவு, பல தசாப்தங்களாக மனிதாபிமான - அறிவியல்பூர்வ அடிப்படையில் உருவாக்கப்பட்ட கொள்கையில் இருந்து ஒருபடி பின்நோக்கிச் செல்வதாகும்.
இந்த வாயில்லா ஜீவன்கள் அழிக்க வேண்டிய பிரச்னை அல்ல. தங்குமிடங்கள், கருத்தடை, தடுப்பூசி மற்றும் சமூக பராமரிப்பு ஆகிய நடவடிக்கைகள் தெருக்களை பாதுகாப்பாக வைத்திருக்க முடியும்.
தெருநாய்களை ஒட்டுமொத்தமாக அகற்றுவது கொடூரமானது, குறுகிய பார்வை கொண்டது, இரக்கமற்றது.
பொதுமக்களின் பாதுகாப்பும் விலங்குகளின் நலனும் ஒன்றிணைந்து செயல்படுவதை நாம் உறுதி செய்ய முடியும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.