கிரண் ரிஜிஜு | ராகுல் காந்தி 
இந்தியா

ராகுலுக்கு எதிரான உரிமை மீறல் தீர்மானம் கைவிடப்பட்டது ஏன்? கிரண் ரிஜிஜு விளக்கம்

ராகுலுக்கு எதிராக கொண்டுவரவிருந்த உரிமை மீறல் தீர்மானம் கைவிடப்பட்டது பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு எதிரான உரிமை மீறல் தீர்மானம் கைவிடப்பட்டதாக அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜன. 28 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் பிப். 1 ஆம் தேதி 2026 -27 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

தொடர்ந்து குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடந்தது. அப்போது சீன ஆக்கிரமிப்பு விவகாரம் குறித்து முன்னாள் ராணுவ தளபதி நரவணே எழுதிய புத்தகத்தில் இருந்தவற்றைக் குறிப்பிட்டு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மக்களவையில் பேசத் தொடங்கியபோது, அவையில் எதிர்ப்பு கிளம்பியது. அவைத் தலைவரும் ராகுல் காந்தியை தொடர்ந்து பேச அனுமதிக்கவில்லை. இதற்கு எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து ராகுல், 'பிரதமர் மோடி அவைக்கு வந்தால் முன்னாள் ராணுவ தளபதி நரவணே எழுதிய புத்தகத்தை அளிப்பேன்' என்று கூறியிருந்தார். ஆனால் பிப். 4 ஆம் தேதி இந்த தீர்மானத்திற்கு நன்றி தெரிவித்து மக்களவையில் பிரதமர் மோடி உரையாற்றுவார் என்று கூறப்பட்ட நிலையில் பிரதமர் மோடி அன்று அவைக்கு வரவில்லை.

ராகுல் காந்தி அவையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாகக் கூறி அவருக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவர அரசு முடிவு செய்துள்ளதாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியிருந்தார்.

இந்நிலையில் கிரண் ரிஜிஜு இதுபற்றி இன்று செய்தியாளர்களுடன் பேசுகையில், "முன்னாள் ராணுவத் தளபதி நரவணேவின் வெளியிடப்படாத புத்தகத்தில் உள்ள குறிப்பையும் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் உரையின்போது ஆதாரமற்ற கருத்துகளையும் முன்வைத்ததற்காக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக அரசு ஒரு தீர்மானம் கொண்டுவரவிருந்த நிலையில் தற்போது அதனை கைவிட அரசு முடிவு செய்துள்ளது.

ராகுல் காந்திக்கு எதிராக பாஜக எம்.பி நிஷிகாந்த் துபே தனித் தீர்மானம் ஒன்று தாக்கல் செய்துள்ள நிலையில், அதனை அவைத் தலைவர் ஆய்வு செய்து அவரின் ஒப்புதலுக்குப் பிறகு, உரிமைமீறல் குழு அல்லது நெறிமுறைகள் குழுவிடம் இந்த விவகாரத்தை கொண்டு செல்லலாமா என்பது குறித்து முடிவு செய்யப்படும். நேரடியாக அவையில் விவாதத்துக்கு கொண்டுவர முடியுமா என்பது குறித்தும் அவைத்தலைவர் முடிவு செய்வார். நிஷிகாந்த் துபே தனித் தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளதால் ராகுலுக்கு எதிராக அரசு கொண்டுவரவிருந்த தீர்மானம் கைவிடப்படுகிறது" என்றார்.

முன்னதாக, மக்களவை எதிா்க்கட்சி தலைவா் ராகுல் காந்தியின் எம்.பி. பதவியைப் பறிப்பதுடன், அவா் வாழ்நாள் முழுவதும் தோ்தலில் போட்டியிடத் தடை விதிக்க தீா்மானம் கொண்டுவரக் கோரி பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே வியாழக்கிழமை மக்களவையில் நோட்டீஸ் அளித்தாா்.

இந்தியாவுக்கு எதிரான அந்நிய சக்திகளுடன் கைகோத்துச் செயல்படுவதாக குற்றஞ்சாட்டி, இந்த நோட்டீஸை அளித்துள்ளதாக துபே தெரிவித்தாா்.

Govt dropped plan to move privilege motion against Rahul Gandhi; Kiren Rijiju

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார பலன்கள் - தனுசு

வார பலன்கள் - விருச்சிகம்

வார பலன்கள் - துலாம்

வார பலன்கள் - கன்னி

வார பலன்கள் - சிம்மம்

SCROLL FOR NEXT